முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கச்சிமடம் அருகே தோண்ட தோண்ட பயங்கர வெடிபொருட்கள் சிக்கின

திங்கட்கிழமை, 25 ஜூன் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

  ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடம் அருகே குழி தோண்டும்போது பயங்கர வெடிபொருட்கள் சிக்கின. இந்த வெடிபொருட்கள் விடுதலைபுலிகளுக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
     ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் பகுதியை சேர்ந்தவர் மீனவர் எடிசன். இவரின் வீட்டில் கழிவுநீர் தொட்டிக்காக குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த குழிக்குள் பொருட்கள் இருப்பது போன்ற தெரிந்தது.இதனை தொடர்ந்து தோண்டி பார்த்தபோது மர்மமான முறையில் 20-க்கும் மேற்பட்ட பெட்டிகள் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து விடாமல் குழியை தோண்டி அந்த பெட்டிகளை பத்திரமாக மீட்டு பார்த்தபோது அதிர்ச்சி அடையும் வகையில் அதில் பயங்கர வெடிகுண்டுகள், துப்பாக்கிகள், குண்டுகள் இருந்தது. இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா அங்கு விரைந்து சென்று அதனை பார்வையிட்டு ஆய்வு செய்தார். வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களை சோதனையிட்டனர். இந்த பெட்டிகளில் இருந்த வெடிபொருட்கள் துருப்பிடித்த நிலையில் இருந்தது. கடந்த 1986-ம் ஆண்டு இந்த பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எப் என்ற அமைப்பினர் தங்கியிருந்ததாகவும், அவர்கள் இலங்கையில் தங்களின் செயல்பாடுகளுக்காக இந்த வெடிபொருட்கள் வாங்கி வந்து பதுக்கி வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
    32 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இந்த வெடிபொருட்கள் இன்றளவும் வெடிக்கும் தன்மையுடன் உள்ளதா, இவை எங்கிருந்து கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்பது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விடுதலை புலிகள் அமைப்பினருக்கு உதவுவதற்காக கடல் வழியாக கடத்தி வரப்பட்ட இந்த வெடிபொருட்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக குழி தோண்டி புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தோண்டதோண்ட பெட்டிகளில் வெடிபொருட்கள் இருப்பதால் தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் தோண்டி பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விடிய விடிய தோண்டும்பணி மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட தகவல் அறிந்த அந்த பகுதியில் ஏராளமானோர் குவிந்து ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர். இதனை தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து