முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கே.ஆர்.எஸ். அணையிலும் நீர் திறப்பு இன்னும் ஒரே வாரத்தில் மேட்டூர் நீர்மட்டம் 100 அடியை எட்டும்!

சனிக்கிழமை, 14 ஜூலை 2018      தமிழகம்
Image Unavailable

சேலம்: மேட்டூர் அணையின் நீர்வரத்து இன்னும் ஒரே வாரத்தில் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளிலும் பெய்து வரும் கன மழை காரணமாக அங்குள்ள கபினி அணை நிரம்பி வழிகிறது. மற்றொரு பெரிய அணையான கிருஷ்ண ராஜசாகர் அணை நிரம்பும் நிலையில் உள்ளது.

இந்த 2 அணைகளுக்கும் தொடர்ச்சியாக நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி கபினி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால் நேற்று காலை 45 ஆயிரத்து 150 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. கபினியில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக - கர்நாடக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலு, ஒகேனக்கல்லை கடந்து மேட்டூர் அணையை வந்தடைந்தது.

இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 71.76 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 75.36 அடியாக உயர்ந்தது. பிற்பகல் 76 அடியை எட்டியது. கடந்த 17-ம் தேதி அணையின் நீர்மட்டம் 40 அடியாக இருந்தது.

124.80 அடி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 120.20 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 39 ஆயிரத்து 737 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நிரம்ப இன்னும் 4 அடியே உள்ளது. நீர்வரத்து அதிகமாக உள்ளதால் இன்னும் ஓரிரு நாளில் அணை நிரம்பி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணை நிரம்பி வருவதால் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து நேற்று காலை முதல் காவிரி ஆற்றில் ஆயிரத்து 155 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்திற்கு 2 ஆயிரத்து 611 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

அப்படி திறக்கப்பட்டால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து இரு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணைக்கு தொடர்ச்சியாக அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் மேட்டூர் அணையில் நீர்மட்டம் 80 அடியை நெருங்கியுள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் 5 நாட்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.  ஒரு வாரத்திற்குள் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டி விடும் என்று பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து