முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் பதவி ஏற்றதில் இருந்து நான் மகிழ்ச்சியாகவே இல்லை கண்ணீர் விட்டு அழுதபடி குமாரசாமி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூர்: முதல்வர் பதவியேற்றதில் இருந்து நான் மகிழ்ச்சியாகவே இல்லை. முதல்வர் பதவி என்பது ரோஜாப் பூ படுக்கை அல்ல. முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி கண்ணீர் மல்க உருக்கமாக தெரிவித்தார்.

கர்நாடகத்தில் சட்டசபை தேர்தலில் தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் அமர்ந்தவர் குமாரசாமி. தற்போது விவசாய கடன் தள்ளுபடி குறித்து நடவடிக்கை எடுத்து வருகிறார். பெங்களூரில் விவசாய கடன் தள்ளுபடி செய்வதற்காக பாராட்டு விழா நடந்தது. விழாவில் முதல்வர் குமாரசாமி கலந்து கொண்டு பேசுகையில், விஷகாந்த் போல் நான் விஷத்தை விழுங்கி விட்டேன். நான் முதல்வராக இருப்பதில் தொண்டர்களும் மக்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். ஆனால் நான் மகிழ்ச்சியாக இல்லை. முதல்வர் பதவி என்பது ரோஜாப்பூ படுக்கை அல்ல. முட்கள் நிறைந்த படுக்கையாகும்.

கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் பணியாற்ற வேண்டும். பா.ஜ.க.வின் தாக்குதல்களை எதிர்கொண்டு பதிலடி கொடுக்க வேண்டும். எனது கட்சியான ம.ஜ.த.வின் லட்சியங்களையும் நிறைவேற்ற வேண்டும். இப்படியே எனக்கு நெருக்கடிகள் கூடினால் எந்த நேரத்திலும் முதல்வர் பதவியை விலக நான் தயாராக உள்ளேன். ஆட்சி, அதிகாரத்துக்காக நானில்லை. விவசாயிகளையும் அவர்களது கடனையும் தள்ளுபடி செய்யவே முதல்வர் பதவியில் அமர்ந்துள்ளேன். இவ்வாறு குமாரசாமி கண்ணீர் மல்க  உருக்கமாக பேசினார்.

மேலும் எனது கட்சி தனி பெரும்பான்மை பெரும் அளவுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை என்பதில் எனக்கு வருத்தம் உண்டு. விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வதில் எந்த மாநிலத்துக்கும் விருப்பம் இல்லை, அக்கறை இல்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் எத்தனை நெருக்கடி கொடுத்தாலும் நான் அளித்த வாக்குறுதியை காப்பாற்றி விட்டேன் என்று குமாரசாமி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து