முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் மசோதாவை நிறைவேற்றுங்கள்: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்

திங்கட்கிழமை, 16 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருக்கும் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை வரும் மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றுங்கள், காங்கிரஸ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு தரும் என்று பிரதமர் மோடிக்கு  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்த போது, மக்களவை, மாநிலங்களவை, சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், மக்களவைக்கு வந்தபோது, சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோரும், பாஜகவில் ஒரு சில தலைவர்களும் கடுமையாக எதிர்த்தனர். இதனால் மசோதா நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், பெண்களின் முன்னேற்றத்துக்காகவும், அதிகாரமளித்தலுக்கும் தீவிரமாகப் போராடி வருவதாக பிரச்சாரம் செய்து வரும் பிரதமர் மோடி, மழைக்காலக் கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைக் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும். அதற்கு ஆதரவு தருகிறோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

''மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது. சட்டப்பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் பெண்கள் தங்களுக்குரிய சரியான பிரதிநிதித்துவத்தைப் பெற வேண்டும். இதற்காக வரும் மழைக்காலக் கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைக் கொண்டு வந்து ஆளும் பா.ஜ.க. அரசு நிறைவேற்ற வேண்டும்.

நீங்கள் பங்கேற்கும் பல்வேறு கூட்டங்களில் மகளிருக்கு அதிகாரமளித்தல் குறித்தும், அவர்களின் முன்னேற்றம் குறித்தும் பேசி வருகிறீர்கள். அவர்களின் வாழ்க்கையை வளப்படுத்தி, அர்த்தம் உள்ளதாக்குங்கள். உங்களின் வாக்குறுதியை நீங்கள் நிறைவேற்றச் சரியான வழி மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றுவதுதான். அதற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் நிபந்தனையற்ற ஆதரவு தருகிறோம்.

இந்த மசோதாவை நிறைவேற்ற வரும் மழைக்காலக் கூட்டத்தொடர்தான் சரியான நேரம். எந்த விதமான தாமதமும் இல்லாமல், அடுத்த தேர்தலுக்கு இதைப் பயன்படுத்தாமல், மழைக்காலக் கூட்டத்தொடரிலேயே இந்த மசோதாவை நிறைவேற்றுங்கள். அதுமட்டுமல்லாமல், கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலும் பா.ஜ.க.வின் முக்கிய வாக்குறுதியாக, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவோம் எனக் கூறி இருக்கிறது.

மகளிருக்கு அதிகாரமளிக்கும் இந்த மசோதாவுக்கு அனைவரும் ஒற்றுமையாக இருந்து, கட்சி வேறுபாடுகள் இன்றி ஆதரவு அளிப்போம். மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டதாகத் தேசத்தின் சார்பில் செய்தியாக அளிப்போம்.'' இவ்வாறு ராகுல் காந்தி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து