முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்: ஐகோர்ட் கிளை உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

வெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தவறான மொழி பெயர்ப்புக்காக 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்ற ஐகோர்ட் மதுரை கிளையின் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் நேற்று இடைக்கால தடை விதித்துள்ளது.

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு தவறான மொழி பெயர்ப்புக்காக கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஐகோர்ட் மதுரைக் கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆங்கிலத்திலிருந்து தமிழில் கேள்விகள் மொழிமாற்றம் செய்யப்பட்டபோது பல்வேறு தவறுகள் நிகழ்ந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பு தவறாக இருந்த 49 கேள்விகளுக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும். மதிப்பெண்கள் 2 வாரத்திற்குள் வழங்கப்பட்டு புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்று சி.பி.எஸ்.இ.க்கு உத்தரவிட்டனர்.

இதை எதிர்த்து சி.பி.எஸ்.இ. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், நீட் தேர்வு வினத்தாள்கள் அந்தந்த மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன், சம்பந்தபட்ட ஆசிரியர்கள் மூலமே மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது எனவும், இதனை சி.பி.எஸ்.இ. சரிபார்க்க வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நீதிபதிகள் பாப்டே மற்றும் நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறுகையில், மொழி பெயர்ப்பு தவறாக இருந்தால் ஆங்கில வினாத்தாளை ஒப்பிட்டு பார்த்து மாணவர்கள் பதில் எழுதி இருக்கலாம். கருணை மதிப்பெண்கள் வழங்குவது தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பெரிய சலுகையாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. மற்ற மாணவர்களுக்கு பாதிப்பாக முடியும். இந்த நிலையில் என்ன செய்யலாம் என்பதை சி.பி.எஸ்.இ. முடிவு செய்ய வேண்டும்.

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு, தவறான மொழி பெயர்ப்புக்காக கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற ஐகோர்ட் மதுரை கிளையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இது குறித்து சி.பி.எஸ்.இ. பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை இரு வாரங்களுக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து