முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது நாளாக தொடர்ந்த லாரிகள் வேலைநிறுத்தம்: விவசாய விளை பொருட்களை அரசு பஸ்களில் இலவசமாக எடுத்து செல்லலாம்

சனிக்கிழமை, 21 ஜூலை 2018      தமிழகம்
Image Unavailable

புது டெல்லி: டீசல் விலை உயர்வு, சுங்கக் கட்டண உயர்வு போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற நாடு தழுவி நடைப்பெற்று வரும் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று 2-வது நாளை எட்டியது. வேலை நிறுத்தப்போராட்டத்தால் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க விவசாய விளைப் பொருட்களை இலவசமாக, கட்டணமின்றி பஸ்களில் கொண்டு செல்ல தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

4,500 லாரிகள்...
டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வு, 3-ம் நபர் காப்பீட்டு கட்டணம் உயர்வு ஆகியவற்றை குறைக்க வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் சார்பில் நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளது. இதில் சென்னையில் இயங்கும் மணல் லாரிகள், காய்கறி லாரிகள், பார்சல் லாரிகள் உள்பட சுமார் 4,500 லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் இயங்கவில்லை என லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர். வேலைநிறுத்தம் காரணமாக லாரி புக்கிங் பார்சல் சேவை நிறுத்தப்பட்டதால் சரக்குகள் தேங்கத் தொடங்கியுள்ளன.

ஆந்திரம், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் காய்கறி வரத்து இல்லாததால் தட்டுப்பாடு நிலவியது. இதுகுறித்து சென்னை மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ் கூறுகையில்,

பாதிக்கப்படும்....
சென்னையில் மணல் லாரிகள், பார்சல் மற்றும் காய்கறிகளை ஏற்றிச் செல்லும் லாரிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. சென்னை மாவட்டத்தில் சுமார் 4,500 லாரிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. மாதவரத்தில் அனைத்து லாரிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசு எங்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வரை வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என்றார்.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சென்னையில் டேங்கர் லாரிகள், எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள், டிரெய்லர் லாரிகளும் போராட்டத்தில் குதித்துள்ளன. இதனால் கியாஸ், பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களுக்கு லாரி மூலம் எடுத்துச் செல்லும் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இலவசமாக...
இந்நிலையில் 2-வது நாளாக நேற்று தொடர்ந்த லாரிகள் வேலைநிறுத்தத்தால் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க விவசாய விளைபொருட்களை அரசு பஸ்களில் கட்டணமின்றி இலவசமாக எடுத்துச் செல்ல தமிழக அரசு அனுமதித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு அனைத்து போக்குவரத்துக் கழகங்களுக்கும் அனுப்பியுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
லாரிகள் வேலை நிறுத்தத்தை முன்னிட்டு விவசாய விளைபொருட்களை, பிற பயணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் எவ்விதக் கட்டணமும் இன்றி, இலவசமாக ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அனைத்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து