முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரைநூற்றாண்டு காலம் வழிநடத்திய சிறப்பான தலைவரை இழந்திருக்கிறது தி.மு.க: கருணாநிதி மறைவுக்கு அ.தி.மு.க. இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 7 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் திமுக தலைவரும் இந்திய நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவரும் தமிழறிஞருமான கலைஞர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தி கேட்டு வருத்தம் கொள்கிறோம். தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா எம்.ஜி.ஆர் போன்ற திராவிட இயக்கத் தலைவர்களோடும் ஏனைய திராவிட இயக்க முன்னோடிகளோடும் தோளோடு தோள் நின்று 70 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி அரசியலிலும், சமூகப்பணிகளிலும் தனக்கென ஒரு தனி இடத்தை பெற்ற பெருமைக்குரியவர் கலைஞர் கருணாநிதி.

திருக்குவளை என்னும் எளிய சிற்றூரில் பிறந்து ஏராளமான இடர்பாடுகளையும் சவால்களையும் தாண்டி உழைப்பாலும் திறமையாலும் தன்னை உலகமறிந்த கலைஞராகவும், தலைவராகவும் உயர்த்திக்கொண்ட தனிபெரும் சிறப்பு கொண்டவர் கலைஞர் என்பதை எல்லோரும் ஏற்று பாராட்டுவர். அரைநூற்றாண்டு காலம் தனனை வழிநடத்திய சிறப்பு மிக்க தலைவரை திமுக இழந்திருக்கிறது. பெருமைக்குரிய தலைவரை கலைஞரின் குடும்பம் இழந்திருக்கிறது. இந்த இழப்பினை தாங்கிக்கொள்ளும் மன உறுதியை அவரது குடும்பத்தினரும் இயக்கத்தினரும் பெற இறைவனை பிரார்த்திக்கிறோம்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவர் பால் அன்பு கொண்ட அனைவருக்கும் அ.தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் உள்ளார்ந்த வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து