முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக அணைகளிலிருந்து காவிரியில் உபரி நீர் திறப்பு: சேலம் உள்ளிட்ட ஆறு மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை: பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 10 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

Source: provided

பெங்களூர் : கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையை அடுத்து அங்குள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 1.43 லட்சம் கனஅடி உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்படுகிறது. இதனால் சேலம், திருச்சி. உள்ளிட்ட 6 மாவட்ட காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மேட்டூர் அணை இன்று மாலை மீண்டும் அதன் முழு கொள்ளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீர்வரத்து அதிகரிப்பு

காவிரியிலிருந்து அதிக நீர் வெளியேற்றப்படுவதால், தமிழகத்தில் காவிரி கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 1.43 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து 80,000 கனஅடி வீதம் உபரிநீர் திறந்து விடப்படுகிறது. அதேபோல் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 60,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.85 அடியை தாண்டியுள்ளது. இன்று மாலை மீண்டும் அணை நிரம்பும் என்று கூறப்படுகிறது. பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 60,000 கனஅடியில் இருந்து 70,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கலில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல்களை இயக்கவும் 33-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தண்ணீர்...

காவிரியில் நீர் திறப்பு அதிகரிப்பட்டுள்ளதால் தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு வெள்ள ஆபத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நடாகா மற்றும் கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து மிக அதிக அளவில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு 1 லட்சத்து 43 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீர் இன்று மேட்டூருக்கு வரும் என தெரிகிறது. இதைத்தொடர்ந்து மேட்டூர் அணையிலிருந்து ஏற்கெனவே காவிரியில் திறந்து விடப்பட்டு வந்த தண்ணீர் 30,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக தண்ணீர் திறந்து விட வாய்ப்பு உள்ளது.

வெள்ள எச்சரிக்கை

இதன் காரணமாக தமிழக காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்குமாறும், முன்னேற்பாடுகளை செய்யவும் மாவட்ட ஆட்சியர்களுகளுக்கு மத்திய நீர்வள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி, தருமபுரி, தஞ்சை, சேலம், ஈரோடு, திருச்சி மாவட்டங்களுக்கு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர் அதிக அளவில் வந்து கொண்டிருப்பதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் மேடான பகுதிக்கு சென்று பாதுகாப்பாக இருக்கும்படியும், தங்களது கால்நடைகள் மற்றும் உடைமைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

முன்னெச்சரிக்கை...

மேலும், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் சார்பில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதோடு தண்டோரா மூலமும், ஒலிப்பெருக்கி மூலமும், தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்கள் வாயிலாகவும், நேரிடையாகவும், பொது மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன.

கண்காணிப்பு பணி...

மேட்டூர் அணையில் பொதுப்பணித் துறை அதிகாரிகளும் அங்கேயே முகாமிட்டு தொடர்ந்து நீர்வரத்துக் குறித்து ஆய்வு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரம் தொடர்ந்து அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வெள்ளம் தொடர்பான உதவிக்கு கட்டணம் இல்லா தொலைபேசி எண் 1077-ஐ தொடர்பு கொள்ளவும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மாவட்ட நிர்வாகம்...

பொதுமக்கள் எவரும் மேட்டூர் அணையின் கரையோரம், காவிரி ஆற்றின் நீர்பிடிப்புப் பகுதிகள், அணையின் தாழ்வான பகுதிகள், சேலம் மாவட்டம், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி வட்டங்கள் உள்ளிட்ட காவிரி கரையோரப் பகுதிகள், நீர்படுகைகள் மற்றும் நீர் வழித்தடங்கள், மேட்டூர் அணை பூங்கா, செக்கனூர் கதவணை, கோட்டையூர், பரிசல்துறை, பூலாம்பட்டி, நெரிஞ்சிப்பேட்டை உள்ளிட்ட காவேரி கரையோரப் பகுதிகள் மற்றும் காவேரியில் இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட அனைவரும் பாதுகாப்பற்ற முறையில் நீரில் இறங்கி குளிப்பதையோ, நீச்சல் அடிப்பதையோ, மீன் பிடிப்பதையோ, கால்நடைகளை குளிப்பாட்டுவதையோ, புகைப்படங்களோ, சுயப் படங்கள் (செல்பி) எடுப்பதையோ, காவிரி கரையோரங்களில் நின்று வேடிக்கை பார்ப்பதையோ முற்றிலும் தவிர்த்திட வேண்டும். விவசாயிகள் நீர்நிலைகளைக் கடக்கும்போது தங்களது கால்நடைகளை பாதுகாப்பாகக் கொண்டு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி, கொள்ளிடத்தில் அதிகளவு நீர்திறக்கப்பட்டுள்ளதால், கொள்ளிடத்தில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது; கால்நடைகளையும் ஆற்றில் இறக்கக் கூடாது என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து