முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் வாய்பாய் உடல் தகனம்

சனிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, டெல்லி ராஷ்ட்ரீய ஸ்மிரிதி ஸ்தல் பகுதியில் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் மறைந்த பிரதமர் வாய்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு அவருடைய வளர்ப்பு மகள் நமீதா கவுர் பட்டாச்சார்யா  எரியூட்டினார். பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

பாரதீய ஜனதா கட்சியை முதன் முதலாக மத்தியில் ஆட்சியில் அமர்த்தியவர் என்ற பெருமை பெற்றவர் வாஜ்பாய். மூன்று முறை இந்தியாவின் பிரதமராக பதவி வகித்துள்ள 93 வயதான வாஜ்பாய், முதுமை மற்றும் உடல் நலக் குறைவின் காரணமாக, டெல்லி கிருஷ்ண மேனன் மார்க் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்தார். சிறுநீரக தொற்று ஏற்பட்டதாலும் உடல்நிலை பாதிக்கப்பட்டதாலும் கடந்த ஜூன் மாதம் 11-ம் தேதி அங்குள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக ஆஸ்பத்திரியில் (எய்ம்ஸ்) அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

வாஜ்பாயின் உடல்நிலை மோசம் அடைந்ததால், பிரதமர் மோடி கடந்த 3 நாட்களுக்கு முன் மாலை மருத்துவமனைக்கு சென்று அவரை பார்த்தார். அதன்பிறகு, வாஜ்பாயின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், உயிர் காக்கும் உபகரணங்களுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் அன்று இரவு எய்ம்ஸ் ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவித்தது.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், ஜிதேந்திர சிங், ஹர்ஷ வர்தன், அஸ்வினி குமார், பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா, பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி, அவரது மகள் பிரதிபா ஆகியோர் நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாயின் உடல்நிலை குறித்து விசாரித்தனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்டோரும் மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாயின் உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டு அறிந்தனர்.

வாஜ்பாயின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானதால், மத்திய அரசின் சார்பில் நடைபெறுவதாக இருந்த சில நிகழ்ச்சிகள்  தள்ளிவைக்கப்படுவதாகவும், சில நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் நேற்றும், இன்றும் நடைபெறுவதாக இருந்த பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டது. வாஜ்பாயின் உடல்நிலை அபாய கட்டத்தில் இருப்பதாக தகவல் கிடைத்ததும், மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் வசிக்கும் அவரது உறவினர்கள், அங்கிருந்து அவசரமாக டெல்லி புறப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில், டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி, வாஜ்பாய் நேற்று முன்தினம் மாலை மரணம் அடைந்தார். இதுபற்றி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மாலை 5.05 மணிக்கு மரணம் அடைந்தார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறப்பட்டு உள்ளது. தீவிர சிகிச்சை அளித்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை என்றும், அவரது மறைவு மிகப்பெரிய இழப்பு என்றும், அவரது மறைவால் நாடு அடைந்துள்ள துயரத்தில் தாங்களும் பங்குகொள்வதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

வாஜ்பாயின் உடல் நேற்று முன்தினம் இரவு ஆஸ்பத்திரியில் இருந்து, கிருஷ்ண மேனன் மார்க் பகுதியில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இரவு 9.30 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோர் அங்கு வந்து வாஜ்பாய் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் முன்னாள் பிரதமர் பிரணாப் முகர்ஜி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன், பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பல்வேறு தலைவர்கள் வாஜ்பாய் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். தமிழக முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

வாஜ்பாய் வீட்டில் வைக்கப்பட்டு இருக்கும் அவரது உடலுக்கு நேற்று காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிப்பட்னர். அதன்பிறகு உடல் அங்கிருந்து, டெல்லி தீன்தயாள் உபாத்யாய் மார்க் பகுதியில் உள்ள பாரதீய ஜனதா தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு காலை 9 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி முடிந்ததும், மதியம் 1 மணிக்கு வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. ஆயிரிக்கணக்கான தொண்டர்கள் புடைசூழ வாஜ்பாயின் உடல் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் அங்கிருந்து ஊர்வலமாக காந்தி சமாதி மற்றும் இந்திரா காந்தி சமாதி அருகே உள்ள ‘ராஷ்ட்ரீய ஸ்மிரிதி ஸ்தல்’ என்ற இடத்துக்கு கொண்டு வரப்பட்டது. ஊர்வலத்தின் போது பிரதமர் மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் நடந்தே வந்தனர். ராணுவ வாகனத்தில் இருந்து வாஜ்பாயின் உடல் இறக்கப்பட்ட போது பிரதமர் மோடி கண்ணீர் விட்டு அழுதார்.

அங்கு அவருக்கு முப்படை வீரர்களின் தளபதிகள் இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு, பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர்கள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். வாஜ்பாயின் நெருங்கிய நண்பர் அத்வானி, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு உள்ளிட்ட முக்கியத் தலைவர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.  பூடான் மன்னர், நேபாள, வங்கதேச, இலங்கை அமைச்சர்கள், ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் அமித் கர்சாய் ஆகியோர் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

வாஜ்பாயின் உடலுக்கு, வேத மந்திரங்கள் முழங்க குடும்ப உறுப்பினர்கள் இறுதிச் சடங்குகளை செய்தனர். வாஜ்பாயின் உடல் மீது சந்தனக் கட்டைகள் அடுக்கப்பட்டன. 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு அவரின் வளர்ப்பு மகள் நமீதா கவுர் பட்டாச்சார்யா எரியூட்டினார். இறுதிச் சடங்குகள் நடந்த போது அவ்விடம் வாஜ்பாயின் தோற்றம் போலவே அமைதியாகக் காணப்பட்டது. அங்கு ஒரு ஆழ்ந்த சோகம் அப்பிக் கொண்டிருப்பதை பார்ப்பவர்களாலும் உணர முடிந்தது. முன்னதாக இறுதிச் சடங்குகள் தொடங்குவதற்கு முன்பு, வாஜ்பாய் உடல் மீது போர்த்தியிருந்த தேசியக் கொடியை எடுத்த முப்படை வீரர்கள், அதனை அவரது பேத்தியிடம் ஒப்படைத்தனர். திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த வாஜ்பாயின் வளர்ப்பு மகளான நமிதா கவுர் பட்டாச்சாரியாவின் மகள் நிஹாரிகாவிடம் தேசியக் கொடி ஒப்படைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து