முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிர்மலாதேவி விவகாரம்: சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை அறிக்கை தாக்கல்

திங்கட்கிழமை, 27 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : கல்லூரி மாணவிகளைத் தவறாக வழி நடத்திய உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி மீது விபசார தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து உள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் புரட்சிகர மாணவர்கள் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் தாக்கல் செய்த மனுவில், கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியர் நிர்மலாதேவி மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை பெண் டி.ஐ.ஜி. தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். இக்குழுவிடம் விசாரணையை ஒப்படைத்து,உயர்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும். அக்கல்லூரி மாணவிகள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கும் விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் கல்யாணசுந்தரம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது சி.பி.சி.ஐ.டி. கூடுதல் கண்காணிப்பாளர் லாவண்யா விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

இந்த வழக்கு தொடர்பாக உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி, உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது  செய்யப்பட்டுள்ளனர்.
பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு ஒப்புதல் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. அதன்படி மூன்று பேர் மீது விபசார தடுப்புச் சட்டப் பிரிவு, கூட்டு சதி, பெண்களின் புகழுக்கு களங்கம் விளைவித்தல், பெண்களைத் தவறான வழிக்கு கொண்டு செல்வதைத் தடுக்கும் சட்டப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவிகளின் செல்லிடப்பேசிகளில் பதிவான நிர்மலாதேவியின் பேச்சுகளையும், முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோருடன் நிர்மலாதேவி பேசிய உரையாடல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நிர்மலாதேவியும் மாணவிகளைத் தவறான வழிக்கு அழைத்தது உண்மைதான் என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சாட்சிகள் 160 பேரிடம் விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 3 பேரின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் மூலம் சிம் கார்டு, மெமரி கார்டு, மடிக்கணினி உள்ளிட்ட 123 முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டு தடயவியல் துறையின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.என்று கூறப்பட்டுள்ளது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், பெண்கள் உரிமை தொடர்பான வழக்குகளை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்து வருவதால் இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்குப் பட்டியலிட உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து