முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களின் ஜனநாயக உரிமைகளை கட்டுப்படுத்த மாட்டோம்: ராஜ்நாத்சிங்

ஞாயிற்றுக்கிழமை, 2 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

லக்னோ : மக்களின் ஜனநாயக உரிமைகளை கட்டுப்படுத்த மாட்டோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் அண்மையில் இடதுசாரி ஆர்வலர்கள் சிலர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், "ஜனநாயகத்தின் பாதுகாப்பு வடிவமே எதிர்ப்பாளர்கள்தான்; அவர்களை அனுமதிக்கவில்லையெனில், பிரச்னை வெடித்து விடும்' எனத் தெரிவித்திருந்தது.

இதுகுறித்து உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராஜ்நாத் சிங்கிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:

ஜனநாயக மதிப்புகளை பாதுகாக்க எங்களது அரசு உறுதிபூண்டுள்ளது. இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை பார்த்தாலே, இதை தெரிந்து கொள்ளலாம். கடந்த 2012ஆம் ஆண்டில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். அப்போதும் இதே குற்றச்சாட்டுதான் முன்வைக்கப்பட்டது.

அரசை கவிழ்க்க முயற்சி மேற்கொள்வது, குறிப்பிட்ட ஒரு சித்தாந்தத்தின் பின்னால் மறைந்து கொண்டு வன்முறையை ஊக்குவிப்பது, நாட்டை துண்டாட சதித் திட்டம் தீட்டுவது ஆகியவை அனைத்தும் பெரிய குற்றங்கள் ஆகும். நக்ஸலைட் தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் மத்திய பாஜக அரசு குறிப்பிட்ட சாதனை படைத்துள்ளது.

நக்ஸலைட் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை தற்போது பலமடங்கு குறைந்துவிட்டது. எனினும், தற்போது நக்ஸலைட்டுகள் வேறு வகையிலான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். நகர்ப்புற பகுதிகளில் பணியாற்றிக் கொண்டு, மக்களிடையே தங்களது சித்தாந்தத்தை பரப்பி கொண்டிருக்கின்றனர். நகர்ப்புற பகுதிகளில் வன்முறையை ஏற்படுத்த அவர்கள் விரும்புகின்றனர். மத்திய புலனாய்வு அமைப்புகளிடம் இருந்து இதுதொடர்பாக எனக்கு அறிக்கைகள் வந்துள்ளன.

காஷ்மீர் விவகாரம் என்பது நீண்டநாள் பிரச்னையாகும். இதற்கு தீர்வு காண்பதற்கு கூடுதல் காலம் பிடிக்கும். பாகிஸ்தான் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கானுக்கு எனது வாழ்த்துக்கள். கிரிக்கெட் களத்தில் சிறப்பாக செயல்பட்டது போல், அரசியல் களத்திலும் அவர் சிறப்பாக செயல்பட வேண்டும். அவரது வெற்றிக்காக பிரார்த்திப்போம்.

இந்தியாவில் காலிஸ்தான் இயக்கத்தை மீண்டும் வளர அரசு அனுமதிக்காது. பிரிட்டனில் 10 லட்சம் சீக்கியர்கள் வசிக்கின்றனர். ஆனால், காலிஸ்தான் தொடர்பாக பிரிட்டனில் அண்மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வெறும் 1,500 முதல் 2,000 பேர் வரை மட்டுமே கலந்து கொண்டனர். இதில் இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர் ஒருவர் கூட கலந்து கொள்ளவில்லை. இதில் பாகிஸ்தானின் தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏதும் இல்லை. ஒவ்வொரு குடும்பத்திலும் சிறிய பிரச்னை எழத்தான் செய்யும். சிவசேனை கட்சி எங்கள் கூட்டணியில் நீடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.என்றார் ராஜ்நாத் சிங்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து