முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குந்துகால் மீன்பிடி இறங்குதள கட்டுமான பணிகள் ராமநாதபுரம் கலெக்டர் வீர ராகவ ராவ் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 4 செப்டம்பர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் ஊராட்சி, குந்துகால் மீனவ கிராமத்தில், மீனவர்கள் நலனுக்காக ஆழ்கடல் மீன்பிடிப்பினை ஊக்குவித்திடும் வகையில் ரூ.70 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மீன்பிடி இறங்குதளத்திற்கான கட்டுமானப் பணிகளை மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் செய்தியாளர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாடு அரசு, மீனவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் பல்வேறு மீனவர் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  அந்த வகையில்,  ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்பினை ஊக்குவித்திடும் வகையில் குந்துகால் மீனவ கிராமப்பகுதியில் ரூ.70 கோடி மதிப்பில் புதிதாக மீன்பிடி இறங்குதளம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு தற்போது அதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டமானது டிசம்பர் 2019க்குள் முழுமையாக நிறைவேற்றிட திட்டமிடப்பட்டுள்ளது. 
இம்மீன்பிடி இறங்குதளமானது சுமார் 300 விசைப்படகுகளை நிறுத்திட ஏதுவாகவும், மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை சேமித்து வைத்திட 100 மெட்ரிக் டன் கொள்ளளவு  கொண்ட குளிர்பதன சேமிப்பு கிடங்கு வசதிகள், சாலை வசதி, மீன்ஏலக்கூட வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது.  அதேபோல சாயல்குடி அருகேயுள்ள மூக்கையூர் கிராமத்தில் ரூ.114 கோடி மதிப்பில் புதிதாக மீன்பிடித்துறைமுகம் அமைக்கும் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.  இத்துறைமுகத்தில் சுமார் 400 விசைப்படகுகள் நிறுத்திட ஏதுவாக அமைக்கப்பட்டு வருகிறது. இம்மீன்பிடித்துறைமுகத்திற்கான கட்டுமானப் பணிகளை வருகின்ற மார்ச் 2019க்குள்  முழுமையாக நிறைவேற்றிட திட்டமிடப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்டுள்ள இவ்விரு திட்டங்களும் முழுமையாக நிறைவேற்றப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டுவரும் பட்சத்தில் மீனவர்களுக்கு பெரும்பயனாக அமையும். இவ்வாறு தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சுற்றுப்பயணத்தின் போது ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் டாக்டர்.ஆர்.சுமன், மீன்வளத்துறை உதவி இயக்குநர்கள் மணிகண்டன், கோபிநாத், சிவக்குமார், மீன்வளத்துறை உதவிப் பொறியாளர் சிவக்குமார், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஆ.செல்லத்துரை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து