முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குட்கா விவகாரத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து பரப்பி என்னை அழிக்கப் பார்க்கிறார்கள் - அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கை

புதன்கிழமை, 5 செப்டம்பர் 2018      மதுரை
Image Unavailable

சென்னை : குட்கா விவகாரத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து பரப்பி என்னை அரசியலில் இருந்து அழித்து விடலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள், இந்த பிரச்சினையை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

சந்திக்கவில்லை...

இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

அம்மாவின் அரசு, குட்கா மற்றும் பான்மசாலா விற்பனையை 23.05.2013 அன்று தடைசெய்து அதை சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்காக பல சீரிய நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. மேலும், குட்கா மற்றும் பான்மசாலா தொடர்புடைய மாதவ்ராவ் என்ற நபரை நான் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சந்திக்காத நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து பரப்பி என்னை அரசியலில் இருந்து அழித்துவிடலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள்.

முழு ஒத்துழைப்பு...

மேற்படி பிரச்சினை குறித்து தி.மு.க.வினர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டது. சட்டத்தை ஏற்று நடக்கும் குடிமகன் என்ற அடிப்படையில் எந்த விசாரணைக்கும் என் ஒத்துழைப்பை அளிக்க தயாராக உள்ளேன். இன்று நடந்த சோதனைக்கும் என் முழு ஒத்துழைப்பை அளித்துள்ளேன். “காய்த்த மரம்தான் கல்லடிபடும்” என்கிற ரீதியில் பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது குறிப்பாக, இரவும் பகலும் பாராமல் பொதுச் சேவை ஆற்றி தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறையை இந்திய அளவில் முன்னோடி மாநிலமாக மாற்றிட பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் என் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அரசியல் எதிரிகள் எழுப்புவது இயல்புதான்.

வெளி வருவேன்...

குற்றச்சாட்டு எழுப்பியதாலேயே ஒருவர் குற்றவாளி ஆகிவிடமாட்டார். இதுபோன்ற பிரச்னைகள் எனது அரசியல் வாழ்வில் ஏற்படும் பொழுதெல்லாம், அவற்றையெல்லாம் கடந்து தொடர்ந்து வெற்றி பெற்று மக்கள் பணியில் தொய்வின்றி ஈடுபட்டு வருகிறேன். இப்பொழுதும் சொல்கிறேன், எனக்கு மடியில் கனமில்லை எனவே, வழியில் பயமில்லை. இந்த பிரச்சினையையும் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொண்டு வெளி வருவேன் என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து