முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: தமிழக அமைச்சரவை நாளை அவசரமாக கூடுகிறது - 7 பேர் விடுதலை குறித்து ஆலோசனை

வெள்ளிக்கிழமை, 7 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு  செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், இது தொடர்பாக முடிவெடுக்க தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது.

முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை  விடுதலை செய்வதற்கு எதிரான மத்திய அரசின் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.என்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மத்திய அரசின் மனு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்வதற்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்றுக் கொள்வதற்கு முகாந்திரம் ஏதும் இல்லை என்று தெரிவித்தது.

மேலும், அந்த மனுவின் மீதான விசாரணையை முடித்து வைப்பதாகவும் கூறினார்கள். அத்துடன், அரசியல் சாசனப்பிரிவு 161-ன் கீழ் தமிழக அரசு, 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக ஒரு முடிவை எடுத்து, அதை மாநில கவர்னரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கலாம் என்றும் கூறினார்கள்.

இந்நிலையில், நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், 7 பேரின் விடுதலை குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னதாக, தமிழக மீனவளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. தமிழக அரசின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப நடவடிக்கை இருக்கும்  என்றார் அவர்.

இதனிடையே 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசு முடிவு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு மகிழ்ச்சியளிப்பதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேர் விடுதலை குறித்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா அன்றே சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து