முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரியை உயர்த்துவது மத்திய அரசுதான் - மாநில அரசு இல்லை: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும் - மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

செவ்வாய்க்கிழமை, 11 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும் என்றும், வாட் வரியை குறைப்பது பற்றி தமிழக அரசு பரிசீலிக்கும் என்றும் சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று சேலம் சென்றார். பின்னர், சேலம் விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்திற்கு பாதிப்பு

கேள்வி: மேகதாது அணை தொடர்பாக கர்நாடகாமுதல்வர் குமாரசாமி பிரதமர் மோடியை சந்தித்திருக்கின்றார். ஒரு சுமுகமான பேச்சு வார்த்தையை தமிழகத்துடன் நடத்திக் கொடுங்கள் என்று கேட்டிருக்கின்றார். இதில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன ?
பதில்: ஏற்கனவே தமிழக அரசால் தெளிவாக குறிப்பிடப்பட்டுவிட்டது. உச்சநீதிமன்றத்திலும் தமிழக அரசினுடைய அனுமதி இல்லாமல் எந்த அணையும் கட்டப்படாது என்று தெளிவான தீர்ப்பு கூறப்பட்டிருக்கிறது. மேகதாதுவில் எக்காரணம் கொண்டும் அணை கட்டக்கூடாது என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. ஏனென்றால், கடுமையான வறட்சி ஏற்பட்டபொழுது, கர்நாடக அணைகளில் தண்ணீர் இருப்பு இருந்தும், குடிப்பதற்குக்கூட தண்ணீர் திறக்க அவர்கள் மறுத்துவிட்டார்கள். அந்த நிலையில், மேலும் ஒரு அணை கட்டப்பட்டால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுவிடும்.
கேள்வி: பாலாறு அருகே அணைகள் கட்டப்பட்டு வருகிறது.
பதில்: சட்ட ரீதியாக நாம் சந்திக்கிறோம்.
கேள்வி: கடந்த காலங்களில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு அமைச்சரைப் பற்றி குற்றச்சாட்டோ அல்லது ஒரு அதிகாரியைப் பற்றி குற்றச்சாட்டோ இருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்வார்கள். சி.பி.ஐ. விசாரணை செய்தும் இதுவரை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்காததற்குக் காரணம் என்ன?
பதில்: குற்றச்சாட்டு சொன்னவுடன் அவர் குற்றவாளியாகிவிட முடியாது. குற்றம் நிரூபிக்கப்பட்டால்தான் குற்றவாளியாகக் கருதப்படுவார்.
கேள்வி: குற்றச்சாட்டு வந்தவுடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார்களே?
பதில்: அப்படி ஒன்றும் எடுத்த மாதிரி தெரியவில்லை. நானும் அமைச்சரவையில்தானே இருக்கிறேன்.
புகார் வரவில்லை...
கேள்வி: அமைச்சர் வேலுமணி மீதும்......
பதில்: நான்தான் ஏற்கனவே சொல்லியிருக்கின்றேனே. இந்த ஆட்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்களிடத்திலே செல்வாக்கு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வேண்டுமென்றே திட்டமிட்டு, அதை பல்வேறு வழிகளிலே தடை செய்ய முற்பட்டார்கள், எதிலும் அவர்களால் சாதிக்க முடியவில்லை. ஆகவே, இப்படிப்பட்ட ஒரு வழியைப் பின்பற்றி ஒரு குற்றச்சாட்டை சுமத்திக் கொண்டிருக்கின்றார்கள், அது உண்மையல்ல. ஆகவே, அம்மாவினுடைய அரசு சட்ட ரீதியாக அனைத்தையும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. எந்தத் துறையிலும் தவறு நடந்துள்ளதாக எங்களுக்குப் புகார் வரவில்லை. அரசைப் பொறுத்தவரை சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கடந்தகால திமுக ஆட்சியில் பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலவியிருந்தன. அவையெல்லாம் இனி வெளியிலே வரும்.

இடைத் தேர்தலுக்கு...

கேள்வி: திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலுக்கு இப்பொழுதே அ.தி.மு.க பணம் கொடுத்திருப்பதாக.. செய்திகள் வெளியாகி இருக்கிறதே.
பதில்: பணம் கொடுத்தது என்பது தவறான செய்தி. ஒரு தேர்தலில் பணம் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம். அப்படிப்பட்ட நிலைமையில் எங்களுடைய அதிமுக இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
கேள்வி: வரப்போகும் பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மை பெறுவோம் என்று அமித்ஷா சொல்லியிருக்கிறாரே.
பதில்: அது அவர்களுடைய நிலைப்பாடு. தமிழகத்தைப் பற்றித்தான் பேசமுடியும். அகில இந்திய அளவில் நம்முடைய கட்சி இல்லை. தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் அதிமுக பலம் பொருந்திய கட்சியாக இருந்து கொண்டிருக்கிறது. நிச்சயமாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 37 இடங்களில் தமிழகத்தில் வெற்றி பெற்றார்கள். அந்த அளவிற்கு, இப்பொழுதும், அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

மத்திய அரசுதான்...

கேள்வி: மதிப்புக் கூட்டு வரியை தமிழகம் குறைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா? ஏனென்றால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது.
பதில்: பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும். வாட் வரியை குறைப்பது பற்றி தமிழக அரசு பரிசீலிக்கும். மத்திய அரசுதான் வரியை உயர்த்திக் கொண்டே போகிறது. மாநில அரசு உயர்த்தவில்லை. இன்றைக்கு மாநிலத்தின் நிதி உங்களுக்கு நன்றாகத் தெரியும். இன்றைக்கு ஒவ்வொரு துறையிலும் பல்வேறு பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றோம். தேவையான நிதி ஆதாரத்தைப் பெருக்குவதுதான் மாநில அரசினுடைய நிலை. அப்படி நிதி ஆதாரத்தைப் பெருக்கினால்தான் துறையில் இருக்கின்ற திட்டங்களை எல்லாம் நிறைவேற்ற முடியும். போக்குவரத்துக் கழகத்தில் எவ்வளவு இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அதையெல்லாம் சரி செய்ய வேண்டுமென்றால், அதற்குத் தேவையான நிதி தேவைப்படுகின்றது. இருந்தாலும், நீங்கள் வைக்கின்ற கோரிக்கைகளை எல்லாம் அரசு சிந்திக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து