முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் பெரிதாக மழை வாய்ப்பு இல்லை

புதன்கிழமை, 19 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தெற்கு - மத்திய வங்கக் கடல் பகுதியில் உருவாகியிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் தமிழகத்துக்குப் பெரிதாக மழை வாய்ப்பு இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில்   செய்தியாளர்களிடம் பேசிய பாலச்சந்திரன் கூறியதாவது,

தெற்கு - மத்திய வங்கக் கடல் பகுதியில் உருவாகியிருக்கும் குறைந்த தாழ்வு பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், அதனைத் தொடர்ந்து ஆழ்ந்தக் காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக் கூடும்.

இதன் காரணமாக தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக் கூடும். இன்று  காற்றின் வேகம் அதிகரித்து 65 முதல் 75 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் அந்தமான், தெற்கு வங்கக் கடல் பகுதிக்கு செப்டம்பர் 19 மற்றும் 20ம் தேதிகளிலும், ஆந்திரா, மத்திய வங்கக் கடல் பகுதியில் 19, 20, 21ம் தேதிகளிலும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் அடுத்த 2 நாட்களுக்கு வட தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை சில முறை மிதமான மழை பெய்யக் கூடும் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த போது, தெற்கு - மத்திய வங்கக் கடல் பகுதியில் உருவாகியிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுப்பெற்று வடக்கு ஆந்திரா, ஒடிசா பகுதிகளை நோக்கியே நகரும் என்பதால் தமிழகத்துக்கு பெரிதாக மழை வாய்ப்பு இல்லை என்றும், அடுத்த 2 நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் தெரிவித்தார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து