முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை ஜனாதிபதி வெங்கையா ,முதல்வர் எடப்பாடி சாமி தரிசனம்

செவ்வாய்க்கிழமை, 25 செப்டம்பர் 2018      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை,திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் மாலை சென்னையில் இருந்து புறப்பட்டு காரில் திருமலைக்கு சென்றார். அவர்கள், திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தனர். அதைத்தொடர்ந்து இரவு 7.30 மணியளவில் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினருடன் திருமலையில் உள்ள வராகசாமி கோவில், லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து நடந்தே பத்மாவதி விருந்தினர் மாளிகைக்குச் சென்றனர்.

வரவேற்பு...தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருமலைக்கு வந்ததையொட்டி, அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டு இருந்தது. முன்னதாக திருமலை - திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், பத்மாவதி விருந்தினர் மாளிகைக்குச் சென்று பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.

சாமி தரிசனம்... துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் இரவு திருப்பதிக்கு வந்தார். அவர் பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுத்தார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சந்தித்து பொன்னாடை போர்த்தினார். அப்போது இருவரும் சில நிமிடங்கள் பேசி கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 5.30 மணியளவில் ஏழுமலையான் கோவிலில் நடந்த அஷ்டதல பாத பத்மாராதனை சேவையில் பங்கேற்று எடப்பாடி பழனிசாமி அவரது குடும்பத்தினர் சாமி தரிசனம் செய்தனர்.

மகிழ்ச்சியாக வாழ... தரிசனத்திற்குப் பிறகு ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்தப் பிரசாதங்களைப் வழங்கி கவுரவித்தனர்.ஏழுமலையான் கோவில் எதிரில் உள்ள ஆஞ்சநேயர் சாமி கோவில் அருகே தேங்காய் உடைத்து பின்னர் ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், ஏழுமலையானின் ஆசியுடன் மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று வேண்டியதாக தெரிவித்தார்.

மரியாதை நிமித்தம்...துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு நேற்று காலையில் சாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்கு பிறகு தேவஸ்தான அதிகாரிகள் ஆலய அர்ச்சகர்கள் அவருக்கு தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். தமிழக முதல்வர் தம்மை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். வேறு பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என்று கூறினார். மாவோயிஸ்டுகள் குறித்து கேட்ட கேள்விக்கு திருமலையில் இதுகுறித்து எதுவும் குறிப்பிட விரும்பவில்லை என்று துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து