முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுமார் 70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க ரு.12.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை

திங்கட்கிழமை, 15 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : 70 லட்சத்து 59 ஆயிரம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க ரூ 12 கோடியே 70 லட்சத்து 79 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:-

பல்வேறு வசதிகள்...

புதிய ஸ்மார்ட் கார்டு நடப்பு கல்வியாண்டிலேயே அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2018 ஜூன் 1ம் தேதி சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்தார். அதனை செயல்படுத்திட பள்ளிக்கல்வி இயக்குனர் கருத்துரு அனுப்பியுள்ளார். அதன்படி மாணவர்களுக்கான திறன் அட்டையில் (ஸ்மார்ட்கார்டு) க்யூ ஆர் கோடு அல்லது பார் கோடு வாயிலாக மாணவர் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் கல்வி தகவல் மேலாண்மை முகமையின் பொது தொகுப்பில் இருந்து இணையதளத்தின் வாயிலாக தகவல்களை பெற முடியும். வழங்கப்பட்ட திறன் அட்டையின் அடிப்படையில் மாணவர்கள் பள்ளி நேரங்களில் பள்ளி வளாகத்தை விட்டு வெளியில் இருக்கும் சூழலில் எந்த பள்ளியில் படிக்கிறார்கள் என்பதை கண்டறிய இயலும். மாணவர்களின் ரத்த பிரிவு சார்ந்த விவரம் ஸ்மார்ட் கார்டில் இருப்பதால் மாணவர்களுக்கு எதிர்பாராத விபத்து ஏற்படும் போது அந்த மாணவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு பெரிதும் உதவும்

70 லட்சம் மாணவர்களுக்கு...

மாணவர்கள் அந்த ஸ்மார்ட் கார்டை அணியும் பொழுது தன்னம்பிக்கை மிகுந்தவர்களாக தங்களை உணர்கிற வாய்ப்பு ஏற்படும் மாணவர்களின் இடை நிற்றலை துல்லியமாக கண்டறிய முடியும். மேலும் பள்ளி கல்வி இயக்குனர் அரசுத்துறையின் கீழ் உள்ள 37 ஆயிரத்து 358 தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 46 லட்சத்து 60 ஆயிரத்து 965 மாணவர்களுக்கும் 8 ஆயிரத்து 386 அரசு உதவி பெறும் மற்றும் பகுதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 23 லட்சத்து 99 ஆயிரத்து 17 மாணவரகளுக்கும், ஆகமொத்தம் 70 லட்சத்து 59 ஆயிரத்து 982 மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க ப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தயார்நிலையில் உள்ளது

இதில் மாணவர்களின் பெயர், மாணவர்களின் அடையாள அட்டை எண், பிறந்த தேதி, தந்தையின் பெயர், முழுமுகவரி, பள்ளியின் பெயர் , ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்ட ஆண்டு, மாணவரின் புகைப்படம், ரத்த பிரிவு, கல்வித்தகவல் மேலாண்மையில் பதிவு செய்யப்பட்ட அனைத்து விவரங்களுடன் பார் கோடு அல்லது க்யூ ஆர் கோடு ஆகியவை இடம் பெறும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் சுயவிவரங்கள் கல்வி தகவல் மேலாண்மை அமைப்பில் உள்ளீடு செய்யப்பட்டுள்ளது. என்றும் மாணவர்களின் சுயவிவரங்கள் அடங்கிய மென்பொருள் பயன்பட்டிற்கு உருவாக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளது என்று பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

பரிசீலித்து ஏற்க முடிவு

இதற்கான ஒப்பந்த புள்ளிகள் தயாரித்து அதனை முழுமையாக நடைமுறைப்படுத்திட தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குனருக்கு அதிகாரம் வழங்கிடவும் இந்த திட்டத்தை செயல்படுத்தவும் ரூ.12 கோடியே 70 லட்சத்து 79 ஆயிரத்து 676 ரூபாய் அனுமதித்து ஆணையம் வழங்குமாறு பள்ளிக்கல்வி இயக்குனர் கருத்துரு அனுப்பியுள்ளார். அதனை கவனமுடன் பரிசீலித்து ஏற்க அரசு முடிவு செய்து ஸ்மார்ட் கார்டு வழங்க ரூ.12 கோடியே 70 லட்சத்து 79 ஆயிரத்து 676 ரூபாய் வழங்கவும் உரிய ஒப்பந்த விதிமுறைகளை கடைபிடித்து திறன் அட்டை ( ஸ்மார்ட் கார்டு ) தயாரிக்க பணியை முழுமையாக நடைமுறைப்படுத்திட தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குனருக்கு அதிகாரம் வழங்கப்படுவதாக அந்த ஆணையில் பள்ளிக்கல்வி செயலாளர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து