முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக பொதுத்துறை ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 23 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,தமிழ்நாடு மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

பெரும் பங்கு வகிக்கிறது... நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தொழிலாளர்களின் பங்கு  மிக முக்கியமானதாகும். தொழிலாளர்களின் பொருளாதார பாதுகாப்பும், முன்னேற்றமுமே நாட்டின் சமச்சீரான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வழிவகுக்கும். உற்பத்தியை பெருக்குவதிலும், பொருளாதார வளர்ச்சியை விரைவு படுத்துவதிலும் தொழிலாளர்களின் உழைப்பு பெரும் பங்கு வகிக்கிறது.

அம்மாவின் வழியில் நடைபெற்று வரும் அம்மாவின் அரசு அத்தகைய தொழிலாளர்களின் பணிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கும் வகையில், பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் தீபாவளி திருநாளை சிறப்பாக கொண்டாட ஏதுவாக 2017-18 ம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

20 விழுக்காடு வரை... திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-ன் படி, போனஸ் பெற தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ. 21,000/- என உள்ளது. இதன்படி போனஸ் கணக்கிட இருந்த மாதாந்திர சம்பள உச்ச வரம்பு ரூ.7,000/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, 2017-18-ம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணை உதவித் தொகையிணை கீழ்க்கண்டவாறு வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்த நிறுவனங்களின் ஒதுக்கக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

10 விழுக்காடு போனஸ்... நஷ்டம் அடைந்துள்ள பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு குறைந்தபட்ச போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 10 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
தமிழ்நாடு மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

வீட்டுவசதி வாரியம்...லாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகையுடன் மொத்தம் 20 விழுக்காடு வரையிலும் ஒதுக்கக்கூடிய உபரி தொகைக்கு ஏற்ப வழங்கப்படும்.  பிற கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அனைத்து தகுதியுடைய பணியாளர்களுக்கும் 8.33 விழுக்காடு குறைந்தபட்ச போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையும் வழங்கப்படும்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு சென்ற ஆண்டு வழங்கப்பட்டதைப்  போல, இந்த ஆண்டும் 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையும் வழங்கப்படும்.

சர்க்கரை ஆலைகள்...தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு சென்ற ஆண்டு வழங்கியதைப் போல 8.33 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.  அரசு ரப்பர் கழகம், தமிழ்நாடு வனத்தோட்ட கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு, அந்த நிறுவனங்களின் ஒதுக்கக்கூடிய உபரித் தொகையை கருத்தில் கொண்டு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகையோ அல்லது 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத்தொகையோ வழங்கப்படும்.

கூட்டுறவு வீட்டுவசதி...தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் பணிபுரியும் சிமற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். ஒதுக்கக்கூடிய உபரி தொகையுடன் லாபம் ஈட்டியுள்ள தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.  ஒதுக்கக்கூடிய உபரி தொகையுடன் லாபம் ஈட்டாத தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை என 10 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.

கருணைத் தொகையாக...இது தவிர தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு 4,000/- ரூபாயும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3,000/- ரூபாயும், போனஸ் சட்டத்தின் கீழ் வராத தலைமை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3,000/- ரூபாயும், தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2,400/- ரூபாயும் கருணைத் தொகையாக வழங்கப்படும்.

ரூ.487 கோடி கூடுதல் நிதி...இதனால் போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் குறைந்த பட்சம் ரூ. 8,400/-ம் அதிகபட்சம் ரூ.16,800/-ம் பெறுவர். மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் 3 லட்சத்து 58 ஆயிரத்து 330 தொழிலாளர்களுக்கு 486 கோடியே 92 லட்சம் ரூபாய் போனஸாக வழங்கப்படும். அரசின் இந்த நடவடிக்கை பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தீபாவளிப் பண்டிகையை சீரோடும், சிறப்போடும் கொண்டாட வழி வகை செய்யும். இவ்வாறு அந்த அறிவிப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து