முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கக் கடலில் உருவானது கஜா புயல்: கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே 15-ம் தேதி கரையை கடக்கும் மணிக்கு 90 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்

ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,தமிழகத்தை நோக்கி நகரும் கஜா புயல் கடலூர் -ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும், இதனால் 14, 15ம் தேதிகளில் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கஜா புயல்....அந்தமான் கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று முன்தினம் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்தது. இந்த நிலையில், இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, புயலாக வலுவடைந்துள்ளது. இந்த புயலுக்கு கஜா (இலங்கை சூட்டியது) என பெயரிடப்பட்டுள்ளது.வடமேற்கு திசையை நோக்கி நகரும் கஜா புயல் இரண்டு நாட்களில் தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளது. மேலும், சென்னையில் இருந்து 990 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த புயல், 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த நிலையில் புயல் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளதாவது:-

பலத்த காற்று வீசும்.....தமிழகம் நோக்கி நகரும் கஜா புயல், 15-ம் தேதி முற்பகலில் கடலூர் -ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் காரணமாக வட தமிழகம் மற்றும் புதுவை கடலோர பகுதிகளில் 14-ம் தேதி இரவு முதல் பலத்த காற்று மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் வீசக் கூடும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும்.  இதனால் 14, 15-ம் தேதிகளில் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை.....வட தமிழகத்தில் மித மற்றும் கனமழை பெய்ய கூடும். வரும் 15-ம் தேதி அநேக இடங்களில் மித மழை, ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய கூடும். இன்று 12-ம் தேதி முதல் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம். ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றவர்கள் இன்று 12-ம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரெட் அலர்ட் இல்லை.....அக்டோபர் 1-ம் தேதி முதல் இன்றைய தேதி வரை இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவு 26 செ.மீ. ஆனால் 20 செ.மீ மழைதான் பெய்துள்ளது. இது இயல்பை காட்டிலும் 21 சதவீதம் குறைவு. இன்னும் டிசம்பர் வரை வடகிழக்கு பருவ மழை காலம் உள்ளது. தற்போது தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எதுவும் விடப்படவில்லை. புயல் வலு இழக்காமலேயே கரையை கடக்கும் வாய்ப்புள்ளது. புயல் கரையை நெருங்கும்போதுதான் துல்லியமாக கணிக்க முடியும். இந்த புயல் வர்தா புயலை விட மிதமான புயல்தான். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து