முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முக்கிய மூலப் பொருளை பயன்படுத்த தடை :சிவகாசியில் பட்டாசு ஆலைகள் காலவரையின்றி வேலைநிறுத்தம்

திங்கட்கிழமை, 12 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

விருதுநகர்,சிவகாசியில் 1,200 பட்டாசு ஆலைகள் நேற்று முதல் காலவரையின்றி மூடப்படும் என பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளதை அடுத்து பல லட்சம் பேர் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பெரும் பாதிப்பு....கடந்த தீபாவளி பண்டிகைக்கு முன் சுப்ரீம் கோர்ட் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. இதனால் இந்த ஆண்டு பட்டாசு விற்பனை பெருமளவு பாதிக்கப்பட்டது. தற்போது, பட்டாசு உற்பத்திக்கு முக்கிய மூல பொருளான பேரியம் நைட்ரேட் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாழ்வாதாரம்... தீபாவளி முடிந்து ஒரு மாதத்துக்குப் பின்னர் அனைத்து பட்டாசு ஆலைகளிலும் உற்பத்தி தொடங்குவது வழக்கம். ஆனால், மூலப் பொருள் தடை காரணமாக, கம்பி மத்தாப்பு, பென்சில், சக்கரம், பூச்சட்டி போன்ற பட்டாசுகளை உற்பத்தி செய்வதில் 60 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், வாலா போன்ற வெடிகள் தயாரிக்க முடியாமல் 20 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், 80 சதவீத வெடிகளை தயாரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பட்டாசு தொழில் பாதிப்பதுடன் 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வதற்கும் வாய்ப்பில்லை. எனவே, பட்டாசு ஆலைகளை மூடுவதை தவிர வேறு வழியில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிவாகாசியில் நேற்று பட்டாசு ஆலை உரிமையாளர்களின் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின்பு அதன் செயலாளர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு விதித்த சுப்ரீம் கோர்ட் உத்தரவால் இந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று பட்டாசு விற்பனை பெரிதும் வீழ்ச்சியடைந்துள்ளதுடன் சுமார் 60 சதவீதம் பட்டாசுகள் விற்காமல் தேங்கியுள்ளதால் தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விருதுநகர் - சிவகாசியில் 1,200 பட்டாசு ஆலைகள் நேற்று முதல் காலவரையின்றி மூட உற்பத்தியாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது. இதனால் பல லட்சம் பேர் வேலையை இழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. நீதிமன்றம் கூறுவது போல பசுமை பட்டாசு என்ற ஒன்று இல்லை. பட்டாசுகளில் பசுமை பட்டாசு என்பது சாத்தியம் இல்லாத செயல்.

பட்டாசுக்கு விதிவிலக்கு... பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதித்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் வரை பட்டாசு ஆலைகள் மூடப்படும் என தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ள சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம், வெளிநாடுகளில் எந்த நாட்டிலும் பட்டாசுக்கு தடை இல்லை. வெளிநாடுகளில் பட்டாசுக்கு சுற்றுச்சூழல் விதிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதுபோல இந்தியாவிலும் பட்டாசுக்கு சுற்றுச்சூழல் விதிகளிலிருந்து பட்டாசுக்கு விதிவிலக்கு அளித்தால் மட்டுமே இந்தத் தொழில் பாதுக்கப்படும் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து