முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கஜா புயலால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிதி: முதல்வர் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : கஜா புயலால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம், ஓமலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதன் விபரம் வருமாறு:-

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை குறித்து ஏற்கனவே தலைமைச் செயலகத்தில் என் தலைமையில், மூத்த அமைச்சர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர்  அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்று வடகிழக்கு பருவமழை காலத்தில் எவ்வாறு பணிகள் மேற்கொள்வது என்பதையெல்லாம் அதிகாரிகளிடத்திலே தகுந்த ஆலோசனை வழங்கப்பட்டு அதனடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. 

கஜா புயலினால் திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், கடலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் பகுதிகளில் மழை பெய்தது.  சுமார் அதிகாலை 2.30 மணியளவிலே 110 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசியது.  இதனால், நாகை மாவட்டம் அதிகமாக பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது.  இதுவரை 11 பேர் இறந்திருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்திருக்கின்றது.

கேள்வி: சேத மதிப்பு எவ்வளவு?
பதில்: சேத மதிப்பு இப்பொழுது கணக்கிட ஆணையிடப்பட்டு, அதனுடைய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாங்கள் ஏற்கனவே கஜா புயலின் வருகை குறித்து எவ்வாறு நடவடிக்கை மேற்கொள்வது என்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில்  எடுக்கப்பட்ட முடிவின்படி, புயல் வருவதற்கு முன்பாகவே, தாழ்வான பகுதிகளில் வசிக்கின்றவர்கள், குடிசையில் வசிக்கின்றவர்கள் எல்லாம் பாதுகாப்பாக 471 முகாம்களில் சுமார் 82,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த காரணத்தினாலே உயிர்சேதமும், மக்களுக்கு பாதிப்புகள் ஏதும் இல்லாமலும் அரசு பார்த்துக் கொண்டிருக்கிறது.
கேள்வி: முகாம்கள் எவ்வளவு நாட்கள் செயல்படும்?
பதில்: இன்று மாலை வரை மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருக்கின்றது.  ஆகவே, அவர்களுக்கு தகுந்த ஏற்பாடுகள் செய்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 
கேள்வி: 12,000-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் பாதிப்படைந்திருக்கிறது, அதற்காக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
பதில்: ஏற்கனவே கஜா புயலால் மின்கம்பங்கள் ஏதாவது சாய்ந்தால் அதை மாற்றியமைப்பதற்கு, சுமார் 7000 மின்கம்பங்கள் அங்கேயே இருப்பு வைக்கப்பட்டிருக்கின்றன.  இப்பொழுது எத்தனை மின்கம்பங்கள் கஜா புயலால் தாக்கப்பட்டு பாதிக்கப்பட்டிருக்கின்றது என்பது கணக்கிடப்பட்டு, அதையெல்லாம்  சரி செய்வதற்குண்டான நடவடிக்கையை மின்சார வாரியம் எடுத்து வருகின்றது. 
கேள்வி: மீனவர்களுக்கான பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கிறது?
பதில்: அதுவும் கணக்கிடப்பட்டு வருகிறது. இன்று(நேற்று) காலைதான் புயல் வந்திருக்கிறது. மீன்வளத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகளெல்லாம் சென்றிருக்கிறார்கள். கரையோரமாக வைக்கப்பட்டிருந்த படகுகள் சில பாதிக்கப்பட்டிருப்பதாக மீனவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.  அதை மீன்வளத் துறையும், வருவாய்த் துறையும் சேர்ந்து, எவ்வளவு சேதம் அடைந்திருக்கிறது என்பதையெல்லாம் கணக்கிட்டு, அரசுக்கு அறிக்கை கொடுத்த பிறகு, அதற்கான நிவாரணம் மீனவ மக்களுக்கு வழங்கப்படும்.
கேள்வி: உயிரிழந்த குடும்பங்களுக்கும், படுகாயம் அடைந்த குடும்பங்களுக்கும் என்ன நிவாரணம் அளிக்கப் போகிறீர்கள்?
பதில்: தற்போது வரை 11 பேர் உயிரிழந்திருப்பதாக மாவட்ட ஆட்சியாளர் மூலமாக அரசுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. உயிரிழந்த குடும்பங்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும்.
கேள்வி: இதை தேசிய பேரிடராக அறிவிப்பதற்கு மத்திய அரசிற்கு தாக்கல் செய்யப் போகிறீர்களா?
பதில்: சேதங்கள் பற்றி கணக்கிட்டபின்தான், அரசு மத்திய அரசுக்கு தெரியப்படுத்தப்படும்.அதுமட்டுமல்லாமல், அங்கே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக நடமாடுகின்ற 405 ஆம்புலன்ஸ் வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மருத்துவர்கள் அந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றார்கள்.
அதே நேரத்தில், கஜா புயலால் அதிக மரங்கள் சாய்ந்திருக்கின்றன.  அப்படி சாய்ந்த மரங்களையெல்லாம் அகற்றுகின்ற பணியில் அதிகாரிகள் அதிகாலையிலிருந்தே ஈடுபட்டிருக்கின்றார்கள்.  அதற்கு தேவையான நவீன இயந்திரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.  அதன் மூலமாக, சாலையில் சாய்ந்திருக்கின்ற மரங்களையெல்லாம் அறுத்து, அதை அப்புறப்படுத்துகின்ற பணியும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.  அதேபோல, பொதுப்பணித் துறையில் இருக்கின்ற அதிகாரிகளும் அங்கே அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றார்கள். அங்கே உள்ள குளங்கள், ஏரிகளை பாதுகாப்பதற்கு வேண்டிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகின்றது.
கேள்வி: ஏற்கனவே அமைச்சர்கள் அந்தந்த மாவட்டங்களில் இருக்கின்றார்கள்,  முதலமைச்சருடைய பயணம் என்றைக்கு தொடங்கும்?
பதில்: ஏற்கனவே அமைச்சர்கள் அங்கேயே தங்கியிருந்து பணிகளை மேற்கெள்ள வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டு, அதன் அடிப்படையிலே அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் அங்கேயே தங்கியிருந்து அந்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.  ஏற்கனவே, அம்மாவினுடைய அரசு கஜா புயலால் கடற்கரை ஓரங்களில் உள்ள மாவட்டங்கள் பாதிக்கப்படும் என்பதற்காக 3 நாட்களுக்கு முன்பே மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டு, அவர்களின் மேற்பார்வையில் அந்தப் பணிகளெல்லாம் இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 
கேள்வி: நிவாரணம் என்பது தலாவா? அல்லது ஒரு குடும்பத்திற்கா?
பதில்: ஒரு குடும்பத்திற்கு. 
கேள்வி: இறந்தவர்களுக்கு 10 லட்சம் என்று கூறினீர்கள், காயமடைந்தவர்களுக்கு?
பதில்: படுகாயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு 25,000 ரூபாயும் வழங்கப்படும்.
கேள்வி: பாதிக்கப்பட்டவர்களை எப்பொழுது பார்க்கப் போகிறீர்கள்?
பதில்: பாதிக்கப்பட்டவர்கள் கணக்கிடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  கணக்கிடப்பட்டபின் நான் சென்றால்தான் அது முறையாக அவர்களுக்கு அறிவிப்பு வழங்கப்படும்.  ஏனென்றால், ஊடகத்தின் மூலமாகத்தான் நாங்களே எவ்வளவு சேதம் அடைந்திருக்கிறது, பணிகள் எவ்வாறு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். நம்முடைய வருவாய்த் துறை அமைச்சர் சகோதரர் உதயகுமார் இரவு முழுவதும் கட்டுப்பாட்டு அறையிலேயே தங்கி நேரடியாக கடலோர மாவட்ட ஆட்சியாளர்களிடத்தில் தொடர்பு கொண்டு புயலால் பாதிக்கப்பட்ட விவரங்களையும், மேற்கொள்ளப்பட்டிருக்கக் கூடிய பணிகள் விவரங்களையும் உடனுக்குடன் எங்களுக்கு தெரிவித்துக் கொண்டிருக்கின்றார். நாங்களும் உடனுக்குடன் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கடலோர மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தக்க அறிவுரை வழங்கி, நிவாரணப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கேள்வி: நீங்கள் நேரில் சென்று பார்க்கவில்லையா? மேலும், நாகப்பட்டினம் இரயில்வே ஸ்டேஷனில் மிகுந்த சேதம் ஏற்பட்டு பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனரே?
பதில்: பார்வையிடுவேன். இந்த இயற்கை சீற்றத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு வடகிழக்கு பருவமழையை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும், அனைத்துத் துறைகளுக்கும் நாங்கள் அறிவுரை வழங்கியிருக்கின்றோம். அந்தந்தத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் அங்கே முகாமிட்டு, அமைச்சர் பெருமக்களும் முகாமிட்டு, எங்களால் நியமிக்கப்பட்ட மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அங்கேயே தங்கி தகுந்த நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறார்கள். மக்கள் அச்சப்படத் தேவையில்லை. தேவையான உதவிகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு செய்யும். கஜா புயல் மிகவும் தீவிரமாகவுள்ளதால், ஒரு சில பகுதிகளில் அதிக சேதாரம் ஏற்பட்டுள்ளது.
கேள்வி: மத்திய அரசிடம் நிதி கேட்பீர்களா?
பதில்: இப்பொழுதுதான் புயலின் வேகம் குறைந்துகொண்டு வருகிறது. மின்கம்பங்கள் பல இடங்களில் சாய்ந்துள்ளது. கடல் சீற்றத்தினால் கடலோர கிராமங்களில் தண்ணீர் புகுந்துள்ளதாக சொல்கின்றார்கள். அதை நேரில் சென்று பார்த்து பிறகு தான் அதிகாரிகள் அறிக்கை கொடுப்பார்கள், எவ்வளவு சேதம் ஏற்பட்டுள்ளது என்று அரசால் கணக்கிடப்பட்டு அதற்குத் தக்கவாறு மத்திய அரசிடம் நிதி உதவி கேட்கப்படும்.
கேள்வி: உள் மாவட்டங்களில் எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது?
பதில்: உள் மாவட்டங்களைப் பொறுத்தவரை மிதமான மழை தான் பொழிகிறது. சில இடங்களில் கனமழை பொழிகிறது. மிகக் கனமான மழை பொழிந்தால்தான் பாதிப்பிற்குள்ளாவார்கள். வானிலை ஆராய்ச்சி மையம் மழையை மிதமான மழை, கனமான மழை மற்றும் மிகக் கனமான மழை என்று மூன்று விதமாக வரையறுத்து வைத்திருக்கின்றார்கள். ஆகவே, மத்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் தகவலின் அடிப்படையில், பாதிக்காத மாவட்டங்களுக்கு தேவையான முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாதிப்புக்குள்ளாகின்ற மாவட்டங்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது, மாவட்ட ஆட்சித் தலைவர்களால் தேவையான நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டு வருகிறது.
கேள்வி: ஏற்கனவே வர்தா புயல் பாதிப்பிற்கே மத்திய அரசிடமிருந்து நிதி முழுமையாக கிடைக்கவில்லை. இதற்கு நிதி கிடைக்குமா?
பதில்: இந்த மத்திய அரசும் கொடுக்கவில்லை. இதற்கு முன்பிருந்த மத்திய அரசும், புயலால் ஏற்பட்ட சேதங்கள் முழுவதற்கும் தேவையான நிதியை வழங்கினார்களோ! இல்லையோ! எனக்குத் தெரிந்து இல்லை. நாமும் சேத மதிப்பீடு கொடுத்தோம். அதற்கு குறிப்பிட்ட அளவுதான் நிதி ஒதுக்கினார்கள், மாநில அரசின் நிதியில்தான் நாம் செலவழித்துக் கொண்டிருக்கின்றோம்.
கேள்வி: ஸ்டெர்லைட் விவகாரத்தில் நிலத்தடி நீர் உறியப்பட்டிருக்கிறது என்று மத்திய அரசு சொல்லியிருக்கின்றார்கள். அதை ஏற்பதும், ஏற்காததும் தமிழக அரசின் பொறுப்பென்று சொல்லியிருக்கின்றார்களே?
பதில்: ஏற்கனவே மாசுக்கட்டுப்பாட்டுத் துறை மூலமாக ஆங்காங்கே மாதிரி காற்று, தண்ணீர் எடுக்கப்பட்டு செய்த ஆய்வின் அடிப்படையில் தான் நாம்  அறிக்கை கொடுத்திருக்கின்றோம். மேலும், நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதின் காரணமாக அதிகமாக, விவரமாக, முழுதாக எதுவும் சொல்ல முடியாது.
கேள்வி: வேதாரண்யம் பகுதி எந்தத் தொடர்பும் இல்லாமல், தனித் தீவாக மாறியுள்ளதாகச் சொல்கிறார்கள், அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
பதில்: நான் ஏற்கனவே தெரிவித்ததைப் போல, வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, மின்சார வாரியத் துறை, நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, உள்ளாட்சித் துறை என பல்வேறு துறையைச் சார்ந்த அதிகாரிகள் எல்லாம் அனுப்பி வைக்கப்பட்டு, சேதங்களை மதிப்பிட்டு, அதற்கேற்றவாறு, அதற்குத் தேவையான பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டு முழு வீச்சுடன் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளளபடும், நிவாரணங்கள் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து