முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்: விராத் கோலி தலைமையிலான இந்திய அணி சாதனை வெற்றி

திங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

Source: provided

அடிலெய்டு : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராத் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சாதனை வெற்றி பெற்றுள்ளது.

புஜாரா அபாரம்

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, அடிலெய்டில் நடந்து வந்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 250 ரன்கள் எடுத்தது. புஜாரா 123 ரன்கள் எடுத்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணி 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அஸ்வின், பும்ரா தலா 3 விக்கெட்டை வீழ்த்தினர்.

323 ரன் முன்னிலை

அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 307 ரன் எடுத்தது. புஜாரா 71 ரன்களும் ரஹானே 70 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் லியான் 6 விக்கெட் வீழ்த்தினார். இந்திய அணி 323 ரன் முன்னிலை பெற்றிருந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. நான்காம் நாளில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 104 ரன் எடுத்திருந்தது. மார்ஷ் 31 ரன்னுடனும் டிராவிஸ் ஹெட் 11 ரன்னு டனு ம்  களத்தில் இருந்தனர். இந்திய தரப்பில் அஸ்வின், ஷமி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.

கேப்டன் பெய்ன்...

இந்நிலையில் கடைசி நாள் ஆட்டம் நேற்று தொடர்ந்தது. ஹெட் 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த மார்ஷ் விக்கெட்டை, பும்ரா சாய்த்தார். இதையடுத்து கேப்டன் பெய்னும் கம்மின்ஸும் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். பெய்ன் 41 ரன் எடுத்திருந்த போது பும்ரா வீசிய பந்தில், ரிஷாப்பிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அந்த அணி, 7 விக்கெட் இழப்புக்கு 187 ரன் எடுத்திருந்தது.

291 ரன்கள் மட்டுமே....

அடுத்து ஸ்டார்க் வந்தார். இவரும் கம்மின்ஸும் பொறுமையாக ஆடினர். இவர்கள் விக்கெட்டை வீழ்த்த இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர். கம்மின்ஸ் 121 பந்துகளை சந்தித்து 28 ரன்கள் எடுத்த நிலையில் அவரது விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார். அடுத்து முகமது ஷமி, ஸ்டார்க் விக்கெட்டை சாய்க்க பரபரப்பு தொற்றிக்கொண்டது. இந்திய அணி வெற்றிக்கு ஒரு விக்கெட் தேவைபட்ட நிலையில், லியானும் ஹசல்வுட்டும் விக்கெட்டை எளிதாக விட்டுக்கொடுக்காமல் சிறப்பாக ஆடினர். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றியை நெருங்கி வந்ததால் விறுவிறுப்பு அதிகமானது. பின்னர் ஹசல்வுட் விக்கெட்டை (13 ரன்) அஸ்வின் சாய்த்ததும் ஆஸ்திரேலியாவின் போராட்டம் முடிவுக்கு வந்தது. 323 ரன் வெற்றி இலக்கை நோக்கி ஆடிய அந்த அணியால் 291 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து 31 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி சாதனை வெற்றி பெற்றது. லியான் 38 ரன் எடுத்தார்.

வரலாற்று வெற்றி...

இந்திய  அணி சார்பில் அஸ்வின், பும்ரா, முகமது ஷமி ஆகியோர் தலா 3 விக்கெட்டையும் இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்திய அணி, 12 வது முறையாக ஆஸ்திரேலியாவில் இப்போது சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இதற்கு முன் வந்த 11 முறையும், முதலா வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதில்லை. இப்போது அந்த வரலாற்றை மாற்றி வெற்றியுடன் இந்த தொடரைத் தொடங்கியுள்ளது இந்திய அணி. இந்த வெற்றி மூலம் 4 டெஸ்ட் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 14-ம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து