முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையில் இன்று மண்டல பூஜை சன்னிதானம் வந்தடைந்தது தங்க அங்கி

புதன்கிழமை, 26 டிசம்பர் 2018      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம் : மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 16-ம் தேதி ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், நெய் அபிஷேகம் நடந்து வருகிறது. இன்று பகல் 11.55 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மண்டல பூஜை நடைபெறுகிறது.

மண்டல பூஜையின் போது திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மகாராஜா ஐயப்பன் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கிய 420 பவுன் எடை கொண்ட தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். தங்க அங்கியில் ஜொலிக்கும் சுவாமி ஐயப்பனுக்கு விசேஷ தீபாராதனையுடன் இந்த மண்டல பூஜை நடைபெறும். மண்டல பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஆரன்முளா பார்த்த சாரதி கோவிலில் இருந்து கடந்த 23-ம் தேதி ஊர்வலமாக புறப்பட்டது. இந்த ஊர்வலம் நேற்று பகல் 12 மணிக்கு பம்பை கணபதி கோவிலை வந்தடைந்தது. அங்கிருந்து மாலை 3 மணிக்கு தங்க அங்கி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

சன்னிதானத்திற்கு சென்றடைந்த தங்க அங்கிக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 18-ம் படிக்கு கீழ் தந்திரி கண்டரரு ராஜீவரு மற்றும் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி ஆகியோரிடம் தங்க அங்கி ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு 18-ம் படி வழியாக சன்னிதானம் கொண்டு செல்லப்பட்டது. அதை தொடர்ந்து தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு அலங்கார தீபாராதனை மற்றும் வழக்கமான பூஜைகள் நடைபெற்று இரவு 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டது. இன்று அதிகாலை 3 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு 11.35 மணிக்கு தந்திரி கண்டரரு, ராஜிவரு தலைமையில் மண்டல பூஜை நடைபெறுகிறது. மண்டல பூஜையையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர். அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மண்டல பூஜைக்கு பிறகு இன்று இரவு 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். மீண்டும் மகர விளக்கு பூஜையையொட்டி ஐயப்பன் கோவில் நடை வருகிற 30-ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். மகர விளக்கு மற்றும் மகர ஜோதி தரிசனம் ஜனவரி மாதம் 14-ம் தேதி நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து