முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி.க்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி: 443 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இந்திய அணி

வியாழக்கிழமை, 27 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்சில் 435 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

சமநிலையில்...

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் தொடரில் அடிலெய்டுவில் நடந்த போட்டியில் இந்தியா 31 ரன் வித்தியாசத்திலும், பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

அகர்வால் அறிமுகம்

இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் எம்.சி.ஜி. மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. அகர்வால் இந்த டெஸ்டில் அறிமுகம் ஆனார். ‘டாஸ்’ வென்று முதலில் விளையாடிய இந்திய அணி நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன் எடுத்து இருந்தது. தனது முதல் டெஸ்டிலேயே தொடக்க வீரரான அகர்வால் முத்திரை பதித்தார். அவர் 76 ரன்கள் எடுத்தார். புஜாரா 68 ரன்னும், விராட்கோலி 47 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

2-வது நாள் ஆட்டம்

நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. புஜாராவும் கோலியும் தொடர்ந்து விளையாடினார்கள். இருவரும் ஆஸ்திரேலிய பந்து வீச்சை தொடர்ந்து நம்பிக்கையுடன் எதிர் கொண்டு சிறப்பாக விளையாடினார்கள். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் கோலி அரை சதத்தை தொட்டார். 110 பந்துகளில் 6 பவுண்டரியுடன் அவர் 50 ரன்னை எடுத்தார். 105. 3-வது ஓவரில் இந்திய அணி 250 ரன்னை தொட்டது. மறுமுனையில் இருந்த புஜாரா மிகவும் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 280 பந்துகளில் 10 பவுண்டரியுடன் 100 ரன்னை தொட்டார். இந்த டெஸ்ட் தொடரில் இவருக்கு 2-வது செஞ்சூரியாகும். அடிலெய்டு டெஸ்டில் 123 ரன்கள் குவித்து இருந்தார்.

82 ரன்னில் அவுட்

67-வது டெஸ்டில் விளையாடும் புஜாராவுக்கு இது 17-வது சதமாகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4-வது செஞ்சூரியை பதிவு செய்தார். மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 277 ரன் எடுத்து இருந்தது. புஜாரா 103 ரன்னும், கோலி 69 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் விராட்கோலி ஆட்டம் இழந்தார். சதம் அடிப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட அவர் 82 ரன்னில் வெளியேறினார். 204 பந்துகளில் 9 பவுண்டரியுடன் கோலி இந்த ரன்னை எடுத்தார். அவரது விக்கெட்டை ஸ்டார்க் கைப்பற்றினார்.

300 ரன்னை தொட்டது

கோலி ஆட்டம் இழந்த போது இந்தியாவின் ஸ்கோர் 293 ரன்னாக இருந்தது. அவரும், புஜாராவும் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 170 ரன் எடுத்தனர். அடுத்து ரகானே களம் வந்தார். கோலி ஆட்டம் இழந்த சிறிது நேரத்தில் புஜாராவும் வெளியேறினார். அவர் 319 பந்தில் 10 பவுண்டரியுடன் 106 ரன்கள் எடுத்தார். கும்மின்ஸ் அவரை ‘அவுட்’ செய்தார். 5-வது விக்கெட்டுக்கு ரகானேயுடன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார். 126.3-வது ஓவரில் இந்திய அணி 300 ரன்னை தொட்டது.

ரோகித் அரைசதம்

தேனீர் இடைவேளையின் போது இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 346 ரன் எடுத்து இருந்தது. ரகானே 30 ரன்னிலும், ரோகித்சர்மா 13 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். தேனீர் இடைவேளைக்கு பிறகு ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ரகானே 34 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து ரிசப்பண்ட் களம் வந்தார். 161.5-வது ஓவரில் இந்தியா 400 ரன்னை தொட்டது. ரோகித்சர்மா 97 பந்தில் 4 பவுண்டரியுடன் 50 ரன்னை எடுத்தார். ரிசப்பண்ட் 39 ரன்னும், ஜடேஜா 4 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

443 ரன் குவிப்பு

இந்திய அணி 169.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன் குவித்த நிலையில் ‘டிக்ளேர்’ செய்தது. கும்மினஸ் 3 விக்கெட்டும், ஸ்டார்க் 2 விக்கெட்டும் எடுத்தனர். பின்னர் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை ஆடியது. ஆரோன் பிஞ்சும், ஹாரிசும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஹாரிஸ் 5 ரன்களும், பிஞ்சு 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நேற்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதன் மூலம் இந்திய அணி 435 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

ரோகித்தைக் கலாய்த்த ஆஸி.கேப்டன்!

மெல்போர்னில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாம் நாளும் ஆதிக்கம் செலுத்தியது. இந்நிலையில் நேற்று காலை ரோகித் சர்மா பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன், ரோகித்துக்கு டென்ஷனை ஏற்படுத்தும் விதமாக பேசினார். இதன் மூலம் அவர் தவறு செய்து ஆட்டமிழப்பார் என்பது அவர் எண்ணம்.

அதன்படி, ‘’ரோகித் சிக்சர் அடித்தால் ஐபிஎல்.லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறி ஆதரவு தெரிவிக்கிறேன்’’ என்று கலாய்த்தார். இதைக் கேட்டு அருகில் நின்ற ஆரோன் பின்ச் உள்ளிட்ட வீரர்கள் சிரித்தனர். இந்த கலாய், ஸ்டெம்ப்பில் பொருத்தப்பட்டிருந்த மைக்கில் தெளிவாகக் கேட்டது. பெய்னின் கலாயை கண்டுகொள்ளாமல், ரோகித் சர்மா மெதுவாக ஆடினார்.  இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து