முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் 60 லட்சம் ஏழைத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2,000 சிறப்பு நிதி: சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

திங்கட்கிழமை, 11 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை. தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள 60 லட்சம் ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இந்த ஆண்டு அரசின் சிறப்பு நிதியுதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

பல்வேறு திட்டங்கள்...

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான், தமிழ்நாட்டின் வளர்ச்சியாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு, ‘எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’, என்று கருதிய மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் பயன் அனைத்து மக்களையும் சென்றடையும் வண்ணம் பல்வேறு மக்கள்நலத் திட்டங்களை செயல்படுத்தினார். அவர் வகுத்துத் தந்த பாதையில் உறுதியாக நடக்கும் அம்மாவின் அரசு, ஏழை, எளிய மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு, அவர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல, பல்வேறு நலத் திட்டங்களையும், வளர்ச்சித் திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது.

சிறப்பு நிதியுதவி...
 
பல மாவட்டங்களில் ‘கஜா’ புயலின் தாக்கத்தினாலும், பருவமழை பொய்த்ததன் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினாலும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும், குறிப்பாக விவசாயத் தொழிலாளர்கள், நகர்ப்புர ஏழைகள், பட்டாசுத் தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள், கைத்தறி தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், மரம் ஏறும் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள், காலணி மற்றும் தோல் பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியுதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

60 லட்சம் குடும்பங்கள்...

இதனால், கிராமப்புறத்தில் வாழும் சுமார் 35 லட்சம் ஏழைக் குடும்பங்களும், நகர்ப்புறத்தில் வாழும் சுமார் 25 லட்சம் ஏழைக் குடும்பங்களும், ஆக மொத்தம் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழும் சுமார் 60 லட்சம் ஏழைக் குடும்பங்கள் தலா 2,000 ரூபாய் சிறப்பு நிதி உதவியைப் பெறுவர். இதற்கென, 1,200 கோடி ரூபாய் 2018-19 துணை மானியக் கோரிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் இப்பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறுஅவர் தெரிவித்தார்.

முதல்வரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து ஆளுங்கட்சி உறுப்பினர்கள் உற்சாகமாக மேசைகளை தட்டி வரவேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து