முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த சுப்ரமணியன், சிவசந்திரன் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மிகுந்த மனவேதனை

இதுகுறித்து முதல்வர் எடப்பாடிபழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நிகழ்த்திய பயங்கர தாக்குதலில், மத்திய ரிசர்வ் காவல் படையினர் பலர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். இத்தாக்குதலில், தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், சவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணபதியின் மகன் ஜி. சுப்ரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டம், கார்குடியைச் சேர்ந்த சின்னையனின் மகன் சி. சிவசந்திரன் ஆகிய இரண்டு வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி எனக்கு மிகுந்த மனவேதனை அளித்தது.

அரசு சார்பில் மரியாதை...

இந்திய திருநாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, தீவிரவாதிகள் நிகழ்த்திய பயங்கர தாக்குதலில், தனது இன்னுயிரை தியாகம் செய்த, மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் சுப்ரமணியன் மற்றும் சிவசந்திரன் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா இருபது லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க நான் 15.2.2019 அன்று உத்தரவிட்டேன். மேலும், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் ஜி. சுப்ரமணியனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தவும், துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தையும், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளருக்கும் அறிவுறுத்தியுள்ளேன்.

ஒருவருக்கு வேலை...

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் சிவசந்திரனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், அரசு சார்பில் மரியாதை செலுத்தவும், சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கும், அரசு கொறடா ராஜேந்திரன், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளருக்கும் உத்தரவிட்டுள்ளேன். மறைந்த சுப்ரமணியன் மற்றும் சிவசந்திரன் ஆகியோரின் குடும்பத்திலுள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து