முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் தாக்குதலில் பலியான 2 தமிழக வீரர்களின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் - மத்திய அமைச்சர்கள் - துணை முதல்வர் - பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

திருச்சி : காஷ்மீர்  தாக்குதலில் பலியான 2 தமிழக வீரர்களின் உடல்கள் 21- குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது மத்திய அமைச்சர்கள், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

2 தமிழக வீரர்கள்...

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வாகனத்தின் மீது பயங்கரவாதிகளின் தற்கொலை படை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தையும், பயங்கரவாதிகளுக்கு எதிராக மக்களிடம் ஆவேசத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன், சுப்பிரமணியன் ஆகிய 2 பாதுகாப்பு வீரர்கள் பலியானார்கள். சிவச்சந்திரன் அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். சுப்பிரமணியனுக்கு சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரி கிராமமாகும். பலியான மற்ற வீரர்கள் உடலுடன் தமிழக வீரர்களின் உடல்களும் டெல்லி கொண்டு வரப்பட்டு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர்  ராஜ்நாத்சிங் ஆகியோர் அஞ்சலிக்கு பின் சொந்த ஊர்களுக்கு உடல்கள் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டன.

நிர்மலா சீதாராமன்...

தமிழக வீரர்கள் சுப்பிரமணியன், சிவச்சந்திரன் உடல்களுடன் கேரளா, கர்நாடகாவைச் சேர்ந்த 2 வீரர்களின் உடல்களும் தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 

இந்த விமானம் நேற்று காலை 11.10 மணியளவில் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. அரியலூர் வீரர் சிவச்சந்திரன் உடல் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு அஞ்சலிக்காக விமான நிலையத்தில் வைக்கப்பட்டது. சிவச்சந்திரன் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டி தேசியக்கொடியால் போர்த்தப்பட்டிருந்தது. அப்போது அவரது உடலுக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திருச்சி விமான நிலையம் வந்து சிவச்சந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். 

கார்குடிக்கு கொண்டு...

அப்போது சிவச்சந்திரனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். அவர்களுக்கு நிர்மலா சீதாராமன் ஆறுதல் கூறினார்.  பின்னர் சிவச்சந்திரனின் உடல் அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் கார்குடிக்கு எடுத்துசெல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு இறுதி சடங்கு நடைபெற்றது. அதன் பிறகு 21 குண்டுகள் முழங்க முழஅரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக அவரது உடலுக்கு மத்திய அமைச்சர் ஆனந்த குமார் ஹெட், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, குமார் எம்.பி., தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கலெக்டர்கள் ராஜாமணி (திருச்சி), விஜயலட்சுமி (அரியலூர்), திருச்சி போலீஸ் கமி‌ஷனர் அமல் ராஜ், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

சவலப்பேரியில்...

இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே சவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த  வீரர் சுப்பிரமணியன் உடல் தனி விமானத்தில் நேற்று மதியம்  மதுரை வந்தது. வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாக்கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். முப்படை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர்  சுப்பிரமணியன் உடலுக்கு வீரவணக்கம் செலுத்தினர். மேலும் பொதுமக்களும் மதுரை விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தினர். பின்னர், சுப்பிரமணியன் உடல் அங்கிருந்து சாலை மார்கமாக தூத்தூக்க்குடி மாவட்டம் சவலாப்பேரி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது வழிநெடுகிலும் சுப்பிரமணியன் உடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரது உடல் சவலாப்பேரியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

துணை முதல்வர் அஞ்சலி...

அப்போது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மேலும் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் பலர் சுப்பிரமணியனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சவலப்பேரி கிராமத்திற்கும் வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட நிதிஉதவியை துணை முதல்வர் குடும்பத்தினரிடம் வழங்கினார். பின்னர் சுப்பிரமணியனின் உடல் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து