முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் பகுதியில் சதமடித்த வெயிலினால் நான்கு வழிச்சாலையில் மாயமான வாகனப் போக்குவரத்து: பொதுமக்கள் அவதி!

புதன்கிழமை, 6 மார்ச் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- திருமங்கலம் பகுதியில் சதமடித்த வெயிலின் காரணமாக நான்கு வழிச்சாலையில் வாட்டி வதைத்திடும் வகையில் அனல்காற்று வீசி வருவதால் உச்சிவெயில் நேரத்தில் வாகனங்கள் ஓட்டிச் செல்வதை பெரும்பாலான வாகனஓட்டிகள் தவிர்த்து வருகின்றனர்.இதனால் பகல் 12மணி முதல் 3மணி வரை வாகனப் போக்குவரத்து குறைந்து நான்கு வழிச்சாலை வெறிச்சோடி காணப்படுகிறது.
அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே திருமங்கலம் பகுதியில் வெப்பத்தின் தாக்கம் வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்த வண்ணம் உள்ளது.நூறு டிகிரிக்கும் மேலான வெயிலுடன் அனல்காற்று வீசிவருவதால் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாமல் பொதுமக்கள்  தவித்துவருகின்றனர்.இதனிடையே திருமங்கலம் பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலை மரங்களின்றி வெறிச்சோடிக் காணப்படுவதால் வெப்பத்தின் தாக்கம் பலமடங்கு உயர்ந்து வாகனஓட்டிகளை சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாக்கி வருகிறது.குறிப்பாக அக்னி நட்சத்திரம் என்றழைக்கப்படும் கத்திரி வெயில் துவங்குவதற்கு முன்பாகவே திருமங்கலம் பகுதி நான்கு வழிச்சாலையில் உச்சிவெயில் நேரமான பகல் 12 மணிமுதல் 3மணிவரை கொடூரமான முறையில் 103டிகிரி வெயிலுடன் அனல்காற்று வீசிவருகிறது.இந்த சமயத்தில் வாகனத்தின் டயர்கள் இளகிவிடும் அளவிற்கு அனல்காற்று வீசுவதால் தொடர்ந்து வாகனங்களை இயக்கிட முடியாமல் வாகனஓட்டிகள் தங்களது வாகனங்களை நிழலுள்ள இடத்தில் நிறுத்திவிட்டு ஓய்வெடுக்க நேரிடுகிறது.
இதன் காரணமாக உச்சிவெயில் நேரத்தில் வாகன போக்குவரத்தின்றி திருமங்கலம் பகுதி நான்கு வழிச்சாலை முற்றிலுமாக வெறிச்சோடி காணப்படுகிறது.இருப்பினும் குளிர்சாதன வசதி  கொண்ட சொகுசு வாகனங்கள் மட்டும் எந்தவிதமான வெயிலின் பாதிப்பும் தெரியாமல் தங்களது பயணத்தை தொடர்ந்து செல்கின்றன.அலைஅலையாக வீசிடும் அனல்காற்று, தொடர்ந்து தெரிந்திடும் கானல்நீர் போன்றவற்றுக்கு இடையே உச்சிவெயில் நேரத்தில் வாகனப் போக்குவரத்து முடங்கி நான்குவழிச்சாலை வெறிச்சோடிக் கிடப்பது வெயிலின் கொடுமையை வெளிக்காட்டுவதாக உள்ளது.அதே சமயம் நான்கு வழிச்சாலையின் பெரும்பாலான இடங்களில் குளிர்பான கடைகள் மற்றும் இளநீர்,தர்பூசணி கடைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.கோடைகால வெயில் போன்று தற்போது வெயிலடித்து வரும் நிலையில் அக்னிநட்சத்திரத்தின் போது வெயிலின் தாக்;கம் எவ்வாறாக இருக்கும் என்பது கற்பனை செய்து பார்க்க முடியாத ஒன்றாக இருக்கும் என வாகன ஓட்டிகளும்,பொதுமக்களும் புலம்பி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து