முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடைசி ஒருநாள் போட்டியிலும் வெற்றி: இந்திய மண்ணில் முதல்முறையாக தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலியா அணி சாதனை

புதன்கிழமை, 13 மார்ச் 2019      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் 3-2 என்ற கணக்கில் இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா அணி முதல் முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

கவாஜா சதம்...

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடைபெற்றது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணியின் உஸ்மான் கவாஜா, ஆரோன் பிஞ்ச் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 76 ரன்னாக இருக்கும்போது ஆரோன் பிஞ்ச் 27 ரன்கள் எடுத்து அவுட்டானார்.  அடுத்து கவாஜா உடன் ஹேண்ட்ஸ்காம்ப் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. 102 பந்தில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் கவாஜா சதம் அடித்தார். இந்தத் தொடரில் அவரின் 2-வது சதம் இதுவாகும். அவர் 104 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹேண்ஸ்ட்காம்ப் 52 ரன்னில் வெளியேறினார். இறுதியில், ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் சேர்த்தது.

இந்திய அணி சார்பில் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டும், முகமது ஷமி மற்றும் ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

273 ரன்கள் இலக்கு...

இதையடுத்து, 273 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் இறங்கினர். தவான் 12 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய விராட் கோலி 20 ரன்னில் அவுட்டானார். ரிஷப் பந்த் 16 ரன்னிலும், விஜயசங்கர் 16 ரன்னிலும் வெளியேறினர்.  ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலு ரோகித் சர்மா நிதானமாக ஆடி அரை சதமடித்தார். அவர் 56 ரன்னில் ஆட்டமிழந்தார்.  அடுத்து இறங்கிய கேதார் ஜாதவும், 7வது விக்கெட்டுக்கு இறங்கிய புவனேஸ்வர் குமாரும் நிலைத்து நின்று ஆடினர். இந்த ஜோடி 91 ரன்கள் சேர்த்தது. புவனேஸ்வர் குமார் 46 ரன்னிலும், கேதார் ஜாதவ் 44 ரன்னிலும் வெளியேற இந்தியாவின் தோல்வி உறுதியானது.

237 ரன்களுக்கு அவுட்...

இறுதியில், இந்தியா 237 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா சார்பில் சம்பா 3 விக்கெட்டும், கம்மின்ஸ், ரிச்சர்ட்சன், ஸ்டோனிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரை 3 - 2 என்ற கணக்கில் கைப்பற்றியது. மேலும், இந்திய மண்ணில் இதுவரை ஒருநாள் தொடரை கைப்பற்றாத ஆஸி. அணி இந்த வெற்றி மூலம் தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து