முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

24 ஆண்டுக்கு பிறகு முலாயம் சிங்குக்கு ஆதரவாக மாயாவதி தேர்தல் பிரசாரம்

சனிக்கிழமை, 16 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

லக்னோ, 24 ஆண்டுகளுக்கு பிறகு மாயாவதி முலாயம்சிங்குக்காக ஓட்டு கேட்கும் நிலை உருவாகி உள்ளது. அவர் என்ன பேசப்போகிறார் என்பதை உத்தரபிரதேச மக்கள் ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருக்கிறார்கள்.   

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் நிரந்தர பகையாளிகளாக இருந்து வந்தன. இதற்கு முந்தைய பல சட்டசபை தேர்தல்களிலும் இந்த இரு கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டன.

கடந்த சட்டசபை தேர்தலிலும் அதேபோல தனியாக போட்டியிட்டதால் அது பாரதிய ஜனதாவுக்கு வாய்ப்பாக அமைந்தது. அங்கு பா.ஜ.க. பெரும் வெற்றியை பெற்று ஆட்சியை பிடித்தது.  முன்னதாக நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் பாரதிய ஜனதா அமோக வெற்றி பெற்றிருந்தது. அந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.  சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கட்சிக்குமே பொது எதிரியாக பாரதிய ஜனதா உள்ளது. எனவே பாரதிய ஜனதாவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் இரு கட்சிகளும் அங்கு இப்போது கூட்டணி அமைத்துள்ளன.

கடந்த காலத்தில் கூட ஒரு தடவை சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்த வரலாறு உண்டு. 1992-ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதா ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது பாபர் மசூதி இடிக்கப்பட்டதை காரணம் காட்டி பாரதிய ஜனதா ஆட்சி கலைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து ஒரு வருடத்திற்கு பிறகு 1993-ம் ஆண்டு அங்கு சட்டசபை தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் ராமர் கோவில் பிரச்சனையால் பாரதிய ஜனதா எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்று எதிர் பார்க்கப்பட்டது.

இந்த வெற்றியை தடுக்கும் வகையில் சமாஜ் வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்தன. அந்த நேரத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனரான கன்சிராம் உயிரோடு இருந்தார். அவர் தான் இந்த கூட்டணியை உருவாக்கினார்.  தேர்தலில் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முலாயம் சிங் முதல்-மந்திரி ஆனார். ஆனால் 1995-ம் ஆண்டு அதாவது ஆட்சி அமைந்த 1½ ஆண்டில் பகுஜன் சமாஜ் கட்சி திடீரென முலாயம் சிங்குக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்று விட்டது.

அப்போது லக்னோவில் விடுதி ஒன்றில் மாயாவதி தங்கி இருந்தார். அவரை சமாஜ்வாடி தொண்டர்கள் முற்றுகையிட்டு ரகளையில் ஈடுபட்டனர். இது மாயாவதிக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.  இந்த சம்பவத்திற்கு பிறகு ஒருபோதும் மாயாவதி, சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி சேரவே இல்லை. இரு கட்சிகளுமே நிரந்தர பகையாளி போல செயல்பட்டு வந்தன. அதே நேரத்தில் மாயாவதி பாரதிய ஜனதாவுடன் கைகோர்த்து 3 தடவை ஆட்சி அமைத்தார்.

ஆனால் இப்போது 24 ஆண்டுகளுக்கு பிறகு சமாஜ்வாடி கட்சியுடன் மாயாவதி கூட்டணி அமைத்துள்ளார். இதுவரை சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங்கை கடுமையாக விமர்சித்து வந்த மாயாவதி இப்போது அவருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

இந்த தேர்தலில் முலாயம் சிங் யாதவ் மெயின்புரி தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அவரை ஆதரித்து மாயாவதி வருகிற 19-ந்தேதி  பிரசாரம் மேற்கொள்கிறார்.  இதில் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய லோக்தள தலைவர் அஜித்சிங் ஆகியோரும் பங்கேற்கின்றார்கள். 24 ஆண்டுகளுக்கு பிறகு மாயாவதி முலாயம்சிங்குக்காக ஓட்டு கேட்கும் நிலை உருவாகி உள்ளது. அவர் என்ன பேசப்போகிறார் என்பதை உத்தரபிரதேச மக்கள் ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருக்கிறார்கள். இத்தனைக்கும் இப்போது பகுஜன் சமாஜ் கட்சியுடன், சமாஜ்வாடி கூட்டணி அமைத்ததை முலாயம்சிங் விரும்பவில்லை. இரு கட்சிகளும் தொகுதிகளை பிரித்து கொண்டபோது, சமாஜ்வாடி கட்சியை விட பகுஜன் சமாஜ் கூடுதலாக ஒரு தொகுதியை பெற்றது. இது முலாயம்சிங்குக்கு அதிருப்தியை எற்படுத்தி இருந்தது. அதுபற்றி எதிரான கருத்துக்களையும் அவர் வெளியிட்டார்.

இந்த நிலையில் தான் முலாயம்சிங்குக்காக மாயாவதி பிரசாரம் மேற்கொள்கிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து