முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களுக்கு உதவக்கூடிய திட்டங்களை வழக்கு போட்டு கெடுக்கும் தி.மு.க.: சேலம் பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சேலம், பொங்கல் பரிசு ரூ.1,000 மற்றும் ஏழை தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் உள்ளிட்ட மக்களுக்கு உதவக் கூடிய திட்டங்களை வழக்கு தொடர்ந்து தி.மு.க. கெடுத்து வருகிறது என்று சேலம் மாவட்டம் கருமந்துறையில் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீஷை ஆதரித்து நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க. மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை சுமத்த்தினார்.

7 கட்டமாக...

பாராளுமன்ற தேர்தல் அறிவி்க்கப்பட்டு நாடு முழுவதும் 7 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18 -ல் வாக்கு பதிவு நடைபெற உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா, புதிய நீதி கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இடம் பெற்றுள்ளன.  இந்த நிலையில் சேலம் மாவட்டம் கருமந்துறையில் நேற்று காலை வெற்றி விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு தமிழக முதல்வரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சாரத்தை துவக்கினார். அங்கு நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். கடைகளில் உள்ள வியாபார பெருமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். முதல்வர் வருகையையொட்டி அங்கு ஏராளமான பொதுமக்களும், தொண்டர்களும் குவிந்தனர்.

40 தொகுதிகளிலும்...

தே.மு.தி.க. வேட்பாளர் சுதீஷை ஆதரித்து பொதுமக்கள் மத்தியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்தை நான் சேலம் கருமந்துறையில் இருந்து துவங்குவதை பெருமையாக கருதுகிறேன். வரும் நாடாளுமன்ற தேர்தலில் 39 இடங்களிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு இடம் என 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். அதே போல் 18 தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட சட்டசபை இடைத் தேர்தலிலும் கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்போடு அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். நம்முடைய வெற்றி வேட்பாளர்கள் பிரச்சாரத்தை துவங்கி உள்ளனர். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

பிரதமராக்குவோம்...

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய நாட்டில் நிலையான ஆட்சி இருந்தால்தான் மக்கள் நலமாக வாழ முடியும். ஆகவே நிலையான ஆட்சியை ஏற்படுத்தும் போது நாட்டிற்கு பாதுகாப்பு கிடைக்கும். இன்றைக்கு பா.ஜ.க. தலைமையில் பிரதமராக இருக்க கூடிய மோடியை  மீண்டும் பிரதமராக்க தமிழகத்தில் இருந்து 40 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் வெற்றி பெற்று அவரை மீண்டும் பிரதமராக்குவோம். நாடு பாதுகாப்பாக இருந்தால்தான் நாம் நிம்மதியாக இருக்க முடியும். நாம் நிம்மதியாக இருந்தால்தான் நாடு செழிக்கும். ஆகவே பாதுகாப்பு முக்கியம். அந்த பாதுகாப்பை நம் பிரதமர் மோடியால்தான் தர முடியும் என்று நிரூபித்து காட்டியுள்ளார். இந்தியாவில் தீவிரவாத அச்சுறுத்தல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
 
மோடியிடம் மட்டுமே...

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காஷ்மீரில் நமது ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்த வாகனத்தில் தீவிரவாதிகள் தாக்கியதில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இப்படிப்பட்ட சம்பவம் எந்த ஒரு இடத்திலும் நடைபெறாமல் இருக்க நிலையான ஆட்சி வேண்டும். இந்திய நாட்டின் பிரதமர் மோடி உடனடியாக நடவடிக்கை எடுத்தார். நம்முடைய விமான படை மூலமாக அண்டைய நாட்டில் இருக்கின்ற பயங்கர வாதிகள் முகாமை குண்டுகளை வீசி அழித்தார். எதிரிகள் முகாமை அழிக்கும் பணியில் ஈடுபட்டபோது இந்திய விமானப் படையை சேர்ந்த விமானப் படை வீரர் அபிநந்தன் எதிரிகளிடம் சிக்கிக் கொண்டார். உடனடியாக பிரதமர் மோடி அவரை மீட்டார். இந்த பெருமை பிரதமர் மோடியையே சாரும். ஆகவே எதிரிகளின் அச்சுறுத்தலை தூள், தூளாக்கும் திறமை மோடியிடம் மட்டுமே உள்ளது என நாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம்.

இரட்டை இலையில்...

இந்திய நாடு மிகப் பெரிய ஜனநாயக நாடு. 130 கோடி மக்கள் வாழ்கின்றனர். இந்த மிகப் பெரிய ஜனநாயக நாட்டிலே வலிமையான தலைமை வேண்டும். அந்த வலிமையான தலைமை நம் பிரதமர் மோடியால் மட்டுமே வழங்க முடியும். எனவே வாக்காள பெருமக்களே சேலம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கே.ஆர்.எஸ். சரவணனுக்கு இரட்டை இலை சின்னத்திலும், கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருக்கு முரசு சின்னத்திலும் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.

பாடுபட வேண்டும்...

இந்த தேர்தல் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடக்கும் தேர்தல். முடிவில் தர்மமே வெல்லும். தர்மம் நம்மிடையே இருக்கின்றது. எனவே இந்த தேர்தலில் தர்மத்தை நிலை நாட்டுங்கள். நல்லதொரு ஆட்சி மத்தியில் மலர வேண்டும். தமிழகம் செழிக்க வேண்டும். அதுதான் எங்களுடைய நோக்கம். எம்.ஜி.ஆர். மற்றும் அம்மா ஆகியோர் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்தவர்கள் அவர்களுடைய கனவை நினைவாக்க நாம் பாடுபட வேண்டும்.

சந்தர்ப்பவாத கட்சி...

கடந்த 16 ஆண்டு காலம் மத்தியில் தி.மு.க. ஆட்சி பங்கு வகித்த போது மக்களுக்கு எந்தவித திட்டங்களையும் செய்ய தவறி விட்டது. மத்தியில் தற்போது ஆட்சி நடத்தும் பி.ஜே.பி. ஆட்சியை மதவாத கூட்டணி என விமர்சித்து வரும் தி.மு.க. கடந்த 1999-ம் ஆண்டு மத்தியில் பி.ஜே.பி.யுடன் கூட்டணி வைத்து ஆட்சி புரிந்தது. அப்போது மதவாத கட்சியாக இல்லாதது தற்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்த பின் பி.ஜே.பி. மதவாத கட்சியாகி விட்டதா? சந்தர்ப்பவாதத்திற்காக தி.மு.க. செயல்படுகிறது என்பது தெரிகிறது.

கெடுக்க நினைக்கும்...

மத்தியில் ஒரு ஆட்சியும், மாநிலத்தில் ஒரு ஆட்சியும் நடைபெற்றால் மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த முடியாது. நூறு கோடி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி அமைய வேண்டும். தமிழக மக்களின் நலன் கருதி ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இரண்டு கோடி மக்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசாக ஆயிரம் ரூபாயும், பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டது. இதை எதிர்த்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை ஆணை பெற முயற்சி செய்த கட்சிதான் தி.மு.க. மக்களுக்கு பயன் பெறும் வகையில் எந்த திட்டத்தை செய்தாலும் கெடுக்க நினைக்கும் கட்சி தி.மு.க.

நிறுத்தி வைப்பு...

தற்போது வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் 2000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்த உடனே உயர் நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கறிஞர் வழக்கு தொடுத்ததால் அந்த திட்டம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு உதவக் கூடிய செயல் திட்டங்களை தி.மு.க. வழக்கு தொடர்ந்து முறியடித்து வருகிறது. கட்சி பாகுபாடு இல்லாமல் இரண்டு கோடி மக்களுக்கும் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அ.தி.மு.க. அரசு உள்ளது. நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றவுடன் மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்கப்படும். பசுமை வீடுகள் கட்டித் தரப்படும். ஏற்கனவே சட்டசபையில் 110 விதியின் கீழ் கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதே போல கள்ளக்குறிச்சியை மையமாக கொண்டு தனி மாவட்டமாக செயல்படுத்தப்படும்.

கால்நடை பூங்கா...

தலைவாசல் அருகே 900 ஏக்கர் இடத்தில் 396 கோடி மதிப்பீட்டில் கால்நடை பூங்கா அமைக்கப்படும். இதில் மருத்துவக் கல்லூரி கால்நடை ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு வகையான வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும். ஆனால் அ.தி.மு.க. ஆட்சி செய்வதை போல தி.மு.க. ஒருபோதும் செய்யாது. பொய் வாக்குறுதியை கூறி விட்டு செயல்படுத்தாத ஆட்சியாக தி.மு.க. இருக்கும். மலைவாழ் மக்கள் மற்றும் அனைத்து தரப்பட்ட மக்களின் நலனிற்காக அம்மாவின் அரசு தொடர்ந்து செயல்படும். எனவே மக்களின் நலனின் அக்கறை உள்ள அரசுகள் மத்தியிலும், மாநிலத்திலும் தொடர அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் சேலம் பாராளுமன்ற உறுப்பினர் வி. பன்னீர்செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் சேலம் மேற்கு ஜி. வெங்கடாஜலம், ஆத்தூர் சின்னதம்பி, கெங்கவல்லி மருதமுத்து, வீரபாண்டி மனோன்மணி, ஏற்காடு சித்ரா, சேலம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆர். இளங்கோவன், வேட்பாளர்கள் சேலம் கே.ஆர்.எஸ். சரவணன், கள்ளக்குறி்ச்சி எல்.கே.சுதீஷ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து