முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விடுதலை புலிகளுக்கு பொய்யான வாக்குறுதி தந்தவர் கனிமொழி - ஈழத் தமிழின படுகொலைக்கு காரணம் அன்றைய காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி - அ.தி.மு.க. வெளியிட்ட கூடுதல் தேர்தல் அறிக்கையில் குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 24 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : விடுதலைப் புலிகளுக்கு பொய்யான வாக்குறுதி தந்தவர் கனிமொழி என்றும், ஈழத் தமிழின படுகொலைக்கு காரணமே அன்றைய காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணிதான் என்றும் அ.தி.மு.க. வெளியிட்ட கூடுதல் தேர்தல் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாராளுமன்றத் தேர்தலையொட்டி அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அண்மையில் வெளியிட்டனர். இந்த நிலையில் நேற்று அ.தி.மு.க. சார்பில் கூடுதல் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அம்சங்கள் வருமாறு:-

இலங்கை வாழ் தமிழ் மக்கள் மொழியுரிமை, சொத்துரிமை, இன பாகுபாடற்ற சம உரிமை, ஆட்சி அதிகாரப் பகிர்வு உரிமை, வாழ்வாதார உரிமை போன்றவற்றிற்காக நீண்ட காலமாக தியாக உணர்வுடன் கடுமையாக போராடி வந்தார்கள். என்றாவது ஒருநாள் நிவாரணம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வந்தார்கள். ஆனால், 2009-ல் இவர்களது நம்பிக்கையில் மிகப் பெரிய இடி விழுந்து பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள். இலங்கை அதிபர் ராஜபக்சே ஆட்சியில் அன்றைய தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி அரசின் உதவியுடன் 19.5.2009 -ல் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் என்று எவரையும் விட்டு வைக்காமல் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை ராணுவ நடவடிக்கை மூலமாக சர்வதேச சமூகத்தால் தடை செய்யப்பட்ட விஷவாயு குண்டுகளை வீசியும் சுட்டு வீழ்த்தியும் கொடுமையான முறையில் கற்பழித்தும் கொத்துக் கொத்தாக தமிழ் மக்களை கொன்று குவித்தார்கள்.

கனிமொழியின் பேச்சை கேட்டு..

தமிழ் ஈழத்தில் ஆண்டாண்டு காலமாக உரிமைகளை மீட்டெடுக்க நடைபெற்று வந்த போரில், உச்சக்கட்ட போர் முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது. ஈழத் தமிழர்கள் வென்று விடுவார்கள் என்ற நிலையை அறிந்த சூழ்ச்சியாளர்கள், சமாதான தூதுவர்களாக கபட வேடம் பூண்டு ஈழத் தமிழ் இனத்தையே அழிக்கத் துணிந்தார்கள். இலங்கை வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஆனந்தி சசிதரனின் வேதனைக் குரல் உண்மைத் தமிழர்களின் இதயங்களை பிளப்பதாக உள்ளது. அதாவது, 16.5.2009-ம் தேதி இரவு 8 மணியளவில் தமிழ்நாட்டின் அன்றைய முதலமைச்சர் கருணாநிதியின் சார்பாக என் கணவர் போராளி எழிலன் என்கிற சசிதரனோடும், போராளி நடேசனோடும் பேசிய தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி, நீங்கள் அனைவரும் ஆயுதங்களை போட்டு விட்டு சரணடைந்து விடுங்கள். உங்களின் விடுதலை தொடர்பாக சர்வதேசத்துடன் பேசியுள்ளோம். உங்களை விடுதலை செய்யவும், உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி வைக்கவும் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று வாக்குறுதி தந்தார்.

நயவஞ்சக வார்த்தை

கனிமொழியின் நயவஞ்சக வார்த்தைகளை நம்பி 17.5.2009-ம் தேதி என் கணவர் எழிலன் என்கிற சசிதரன் உட்பட போராளிகள், குடும்பப் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள், பச்சிளங் குழந்தைகள், வயதானவர்கள் ஆகியோரை பிரான்சிஸ் ஜோசப் என்ற பாதிரியார் முன்னிலையில் நிராயுதபாணிகளாக, சிங்கள ராணுவத்திடம் நானே சென்று ஒப்படைத்தேன். ஆனால், சரணடைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள். இந்தக் கொடிய நயவஞ்சக செயலை முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி திட்டமிட்டு செய்தார் என்ற அதிர்ச்சி தரும் சதித்திட்ட தகவலை இலங்கை வடக்கு மாகாண பிரதிநிதி ஆனந்தி சசிதரன் தொலைக்காட்சி ஊடகங்கள் மூலமாக உலகத்திற்கு வெளிப்படுத்தியுள்ளார். இக்கொடுஞ் செயல்களை தட்டிக் கேட்டு, தடுத்து நிறுத்த வேண்டிய தமிழகத்தை ஆண்ட அன்றைய முதல்வர் கருணாநிதி மற்றும் துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு வாய்மூடி மௌனியாக இருந்ததுடன் உண்ணாவிரதம் என்ற பெயரில் போலி நாடகத்தை நடத்தி சிங்கள அதிபர் . ராஜபக்சே நடத்திய ஈழத் தமிழர் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்தார்கள்.

மெரினாவில் போலி நாடகம்

தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை மெரினா கடற்கரையில் போலியான ஒரு உண்ணாவிரத நாடகம் அரங்கேறியது. ஈழத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழீழ இனப் படுகொலைப் போர் உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருந்த போது, தமிழீழப் போராளிகள் அந்த இறுதி கட்டப் போரில் வென்று விடக் கூடிய நிலையும் இருந்தது. தமிழீழ போராளிகளையும், தமிழ் ஈழ மக்களையும் ஏமாற்றி அந்தப் போரில் தமிழீழ போராளிகளைத் தோற்கடிக்க தி.மு.க. தலைவர் கருணாநிதி சூழ்ச்சி வலை பின்னினார். ஈழத்தில் போரை சிங்கள அரசு நிறுத்தி விட்டது. அங்கு சுமூக சூழ்நிலை உருவாகி உள்ளது என்ற வஞ்சகமான பொய்யை உலகத் தமிழர்களும், ஈழப் போராளிகளும் அறியும் வண்ணம் தெரிவித்து விட்டு போலியாக ஆரம்பித்த உண்ணாவிரத நாடகத்தை இரண்டு மணி நேரத்திலேயே முடித்து விடுகிறார்.

டெல்லியை ஆண்டு கொண்டிருந்த காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி அரசுக்கு தூணாகவும், உற்ற ஆலோசகராகவும் இருந்த கருணாநிதியே போர் நின்று விட்டது, அங்கு அமைதிச் சூழ்நிலை உருவாகிறது என்று வஞ்சகமாகக் கூறியவற்றை ஈழத் தமிழர்களும், ஈழப் போராளிகளும் உண்மையென நம்பி போரையும் நிறுத்தி விட்டார்கள். இதில், தமிழ் ஈழப் போராளிகளும், ஈழத் தமிழ் மக்களும் முற்றிலும் ஏமாற்றப்பட்டு விட்டார்கள். இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி ஆட்சியினுடைய அனைத்து வித சாதனங்களையும் பயன்படுத்தி நவீன ஆயுதங்களாலும் விஷவாயு குண்டுகளாலும் முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழினத்தையே சிங்கள ராஜபக்சே அரசு அழித்து விட்டது.

சதித்திட்டம்

மத்தியில் ஆட்சியில் இருந்த தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி அரசும், இலங்கையை ஆண்ட சிங்கள அதிபர் ராஜபக்சே அரசுக்கு துணை போனது. செப்டம்பர் 2018-ல் இந்தியாவிற்கு வருகை புரிந்த இலங்கை அதிபர் ராஜபக்சே, இந்தியாவை ஆண்ட அரசாங்கத்தின் ஆதரவில்லாமல் தமிழ் ஈழப் போராளிகளுக்கு எதிரான போரில் நாங்கள் வெற்றி பெற்றிருக்க முடியாது என்ற கொடிய உண்மையை வெளிப்படையாக ஒப்புக் கொண்டதில் இருந்தே ஈழத் தமிழ் இன அழிப்பில், தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி அரசின் சதித் திட்ட பின்னணியை தெளிவாக உணர முடிகிறது.

இலங்கையில் நடைபெற்ற ஈழத் தமிழின படுகொலைகளுக்கு சிங்கள அதிபர் ராஜபக்சேவின் குடும்பமும், டெல்லியில் மைய ஆட்சியில் இருந்த காங்கிரஸ் -தி.மு.க. கூட்டணி அரசும், விடுதலைப் புலிகள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்த அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது மகள் கனிமொழி உள்ளிட்ட அவரது குடும்பமும் தான் முக்கிய காரணகர்த்தாக்களாக இருந்தார்கள் என்று சமூக ஊடகச் செய்திகளும், வீடியோ பதிவுகளும் உறுதிப்படுத்துகின்றன.

ராஜபக்சேவிடம் கனிமொழி பெற்ற பரிசு

ஈழத் தமிழின அழிப்புப் போர் முடிந்த பிறகு, 2009-ம் ஆண்டு அக்டோபர் திங்களில் கருணாநிதியின் மகள் கனிமொழி தலைமையில் இந்திய அரசின் சார்பில் இனப் படுகொலைப் போரில் சிங்கள அதிபர் ராஜபக்சே பெற்ற வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்க இலங்கை சென்றார்கள். அந்தக் கொடிய போரின் வெற்றிக்கு உதவிய கனிமொழி குழுவினருக்கு நன்றிக்கடனாக பாராட்டுதல்களையும், பரிசுப் பொருட்களையும் நன்றி உணர்வுடன் சிங்கள அதிபர் ராஜபக்சே வழங்கியதையும், இந்திய அரசின் தூதுவர்களாகச் சென்ற கனிமொழி குழுவினர் மகிழ்ச்சியுடனும், முக மலர்ச்சியுடனும் பெற்றுக் கொண்டதை ஊடகச் செய்திகளும், வீடியோ பதிவுகளும் ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளன. இதன் அடிப்படையில், ஈழத் தமிழினப் படுகொலைக்கு முக்கிய காரணமானவர்களான அன்றைய காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியாளர்களையும், அவர்கள் சார்பில் சிங்கள அதிபர் ராஜபக்சேவை சந்தித்து வாழ்த்துக் கூறி பரிசுப் பொருட்களைப் பெற்று வந்த கனிமொழி தலைமையிலான குழுவினரையும், இனப் படுகொலைக்கு காரணமான போர்க் குற்றவாளிகள் என்று அடையாளங்கண்டு ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச நாடுகளும், இந்திய அரசாங்கமும் உரிய சட்ட நடவடிக்கைகளை விரைவாக எடுத்து, தக்க தண்டனை வழங்க அ.தி.மு.க. பெரிதும் வலியுறுத்தும்.

ஈழத்தமிழர்களுக்கு பொது வாக்கெடுப்பு

படை உதவி, ஆயுத உதவி மற்றும் பொருளுதவி அளித்ததின் அடிப்படையில், ஈழத்தில் சிங்கள அரசால் வெறித்தனமாக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் போர்க்குற்றங்கள் மற்றும் இனப் படுகொலைகள் குறித்தும் இந்த இனப் படுகொலைகளுக்கு காரணமாக போர்க் குற்றவாளிகளை இனம் காண்பது குறித்தும், நம்பிக்கைத்தன்மையுள்ள பன்னாட்டு விசாரணையை ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ள வேண்டும் என்றும், ஈழத் தமிழரின் கோரிக்கைகள் தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், அழுத்தம் கொடுப்பதற்கு இந்திய அரசையும், ஐக்கிய நாடுகள் அமைப்பையும், ஏனைய பன்னாட்டு அமைப்புகளையும் அ.தி.மு.க. வலியுறுத்தும்.

ஏழு தமிழர்களை விடுவிக்க நடவடிக்கை

இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு, இலங்கை அரசு அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும், இலங்கையில் வாழும் ஏனைய குடிமக்களுக்கு சமமாக தமிழர்களுக்கும் உரிமைகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதற்கும், மாகாணங்களுக்கு முறையான அதிகாரப் பகிர்வு முறை கொண்டு வர வேண்டும் என்று இலங்கை அரசுக்கு திடமான அழுத்தம் கொடுக்குமாறு மத்திய அரசை அ.தி.மு.க. வலியுறுத்தும்.

போரில் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு, வேளாண்மை, வீட்டு வசதி, தொழிலகங்கள் மற்றும் கல்வி ஆகியவை தொடர்பாக முழு அளவில் மறுவாழ்வு அளிக்க, அழுத்தம் கொடுக்குமாறு மத்திய அரசை அ.தி.மு.க. வலியுறுத்தும். இந்திய உச்சநீதிமன்றத்தால் உத்திரவிடப்பட்டவாறும், தமிழ் நாடு அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டவாறும் ஏழு தமிழர்களையும் விடுவிப்பதற்கு, தமிழக ஆளுநருக்கு உரிய உத்தரவு பிறப்பிப்பதற்கு மத்திய அரசையும், குடியரசுத் தலைவரையும் அ.தி.மு.க. வலியுறுத்தும். இவ்வாறு அந்த தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து