முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற மற்றும் சட்டசபை இடைத் தேர்தல்: தமிழகத்தில் நடந்த அனல் பறக்கும் பிரச்சாரம் முடிவுக்கு வந்தது: நாளை பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை, நேற்று மாலையுடன் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவுக்கு வந்ததையடுத்து தமிழகம் முழுவதும் நாளை பாராளுமன்ற மற்றும் சட்டபை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது.

91 தொகுதிகளில்...

பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக 91 நாடாளுமன்ற தொகுதிகளில் கடந்த 11-ம் தேதி தேர்தல் நடந்தது. அதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட தேர்தல் நாளை 18-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நடக்கிறது.

5.99 கோடி பேர்...

இந்த தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் பா.ஜ.க. பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. தி.மு.க. காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.  டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கட்சி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளும் தேர்தல் களத்தில் உள்ளன. பாராளுமன்ற தேர்தலில் ஆண்கள் 781, பெண்கள் 63, திருநங்கை ஒரு இடம் என 845 வேட்பாளர்களும்,  சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆண்கள் 242, பெண்கள் 27 என 269 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தமிழகத்தில் மொத்தம் 5.99 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

அ.தி.மு.க. கூட்டணி...

கடந்த ஒரு மாதமாக ஒவ்வொரு கட்சியின் தலைவரும் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு தங்கள் கட்சியின் வேட்பாளர்களுக்காக சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர். அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் கட்காரி, பியூஸ் கோயல், ஸ்மிருதி இராணி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மற்றும் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் பிரசாரம் செய்தனர்.

தி.மு.க. கூட்டணி...

தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக அந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் பிரசாரம் செய்தனர். டி.வி.தினகரன், கமல் ஹாசன், சீமான் உள்பட பலரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிவுக்கு வந்ததையடுத்து தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் நேற்று உச்சக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

நாளை 18-ம்தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. மதுரை பாராளுமன்ற தொகுதிக்கு காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து