முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் 8 வழி சாலை திட்டத்துக்கான தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அப்பீல்

வெள்ளிக்கிழமை, 31 மே 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, சென்னை - சேலம் இடையேயான எட்டு வழிச்சாலை திட்டத்துக்கான தடையை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலைத் துறை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீ்ட்டு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை வரும் 3-ம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.10 ஆயிரம் கோடி...

மத்திய அரசின், பாரத்மாலா திட்டத்தின் கீழ் சென்னை - சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 276 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 வழித்தடங்கள் கொண்ட பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. சேலம், தர்மபுரி, காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இந்த திட்டத்துக்காக சுமார் 1,900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்து, 2018-ம் ஆண்டு மே மாதம் அதற்கான அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டது.

ஐகோர்ட்டில் வழக்கு...

இந்த நிலையில் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இந்த 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை ரத்து செய்யக் கோரியும், இந்த திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரியும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், சென்னை - சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து தீர்ப்பளித்தது. மேலும், இந்த திட்டத்துக்காக பொதுமக்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டிருந்தால், அவற்றை 8 வாரத்துக்குள் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

3-ம் தேதி விசாரணை...

சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வெளியாகி ஒரு மாதத்திற்கும் மேல் ஆகியுள்ள நிலையில், எட்டு வழி சாலை திட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலைத் துறை, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல் முறையீட்டு மனுவை வரும் 3-ம் தேதி சுப்ரீம் கோர்ட் விசாரிக்கும் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து