சென்னை : பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் அணைகளில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறந்து விட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கோரிக்கை...
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசனத்திற்கு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசனத்திற்கு 28.6.2019 முதல் 28.2.2020 வரை நாள் ஒன்றுக்கு 850 கனஅடி/விநாடிக்கு தண்ணீர் இருப்பைப் பொறுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் I மற்றும் II அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.
64,000 ஏக்கர்...
இதனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாறு பாசனப் பகுதிகளின் 64,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.