முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவீத ஒதுக்கீடு: சட்டசபையில் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

வெள்ளிக்கிழமை, 12 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்ற சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டில் அரசு துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் ஒட்டன்சத்திரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி மாநில மற்றும் மாவட்ட அளவில் விளையாட்டு துறையில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு பொது நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்குவது குறித்து அவையின் கவனத்தை ஈர்த்து தீர்மானத்தை கொண்டு வந்தார்.

இதற்கு பள்ளி கல்வி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் 2018-ம் ஆண்டு சுதந்திர தின உரையின் போது முதலமைச்சர், தகுதியின் அடிப்படையில் விளையாட்டு வீரர்களுக்கு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் கண்டறியப்பட்ட பணியிடங்களில் இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி 20.2.2019ல் அரசு துறைகளில் கண்டறியப்பட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் பணி நியமனம் செய்ய வழிவகை குறித்து ஆணையிடப்பட்டுள்ளது. அந்த அரசாணைப்படி விளையாட்டு துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு விளையாட்டு நிலையின் அடிப்படையில் வகை ஒரு பணியிடங்கள் பொதுத்துறை நிறுவனங்களிலும், வகை 2 பணியிடங்கள் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிலும், வகை 3 மற்றும் 4ல் கண்டறியப்பட்ட பணியிடங்களில் அரசு துறைகளிலும் வேலைவாய்ப்பு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் பாரா ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்ற விளையாட்டு வீரர்கள் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வாரியங்களில் வகை 1 பணியிடங்களில் வேலை வாய்ப்பு பெற தகுதி உள்ளவர் ஆவர். காமன்வெல்த் போட்டிகள், ஆசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் வௌ்ளி, வெண்கலம் பதக்கம் வென்றவர்கள் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள், ஐபிஎஸ்ஏ உலக விளையாட்டுகள், செபாலிம்பிக் ஆசிய மற்றும் காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகள், தெற்கு ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் மற்றும் ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்ற வீரர் வீராங்கணைகளுக்கு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வாரியங்களில் வகை 2 பணியிடங்களில் வேலை வாய்ப்பு பெற தகுதி உள்ளவர் ஆவர். மேலும் இந்த அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்ற சிறந்த விளையாட்டு வீரர் வீராங்கணைகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் அரசு துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்படும். பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்ற 2 விளையாட்டு வீரர்கள், 1 விளையாட்டு வீராங்கணைக்கு மேற்படி அரசாணைப்படி பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அரசால் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து