சுங்க கட்டண முறை ரத்து செய்யப்பட மாட்டாது - மத்திய அமைச்சர் கட்காரி உறுதி

புது டெல்லி : நல்ல தரமான சாலைகள் வேண்டுமென்றால் சுங்க கட்டணத்தை மக்கள் செலுத்துவது அவசியம் என்றும் சுங்க கட்டண முறை ரத்து செய்யப்பட மாட்டாது என்றும் பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறினார்.
மக்களவையில் நேற்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்து அத்துறையின் அமைச்சர் நிதின் கட்காரி பேசியதாவது:- நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுங்க கட்டணம் வசூலிப்பது தொடர்பாக சில உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர். சுங்கச் சாவடிகள் மூலமாக வசூலிக்கப்படும் பணமானது, கிராமப்புற மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் சாலைகள் அமைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. சுங்கக் கட்டண விகிதங்கள் அவ்வப்போது மாறுபடும். ஆனால், சுங்க கட்டண முறை ரத்து செய்யப்பட மாட்டாது. நல்ல தரமான சேவைகள் வேண்டும் என்றால் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டியது அவசியம். சாலைத் திட்ட பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துவது பெரிய பிரச்சனையாக உள்ளது. இந்த விஷயத்தில் மாநில அரசுகள் தீர்வு காண வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில் 40 ஆயிரம் கி.மீ. நீளத்திற்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.