முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை

செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி  அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கவும், அவர்களது வருவாயை அதிகரித்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், நெசவாளர்கள் தற்போது பெற்று வரும் அகவிலைப் படியில் 10 விழுக்காடு உயர்த்தி வழங்கப்படும். இதனால் 1,137 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள சுமார் 2 லட்சம் கைத்தறி நெசவாளர்கள், ஆண்டு ஒன்றுக்கு 14 கோடி ரூபாய் அளவிற்கு பயன் பெறுவார்கள்.

விலையில்லா வேட்டி மற்றும் சேலை வழங்கும் திட்டத்தின் கீழ், விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கூலி, சேலை ஒன்றுக்கு 39 ரூபாய் 27 காசுகளில் இருந்து 43 ரூபாய் ஒரு காசாகவும், வேட்டி ஒன்றுக்கு 21 ரூபாய்
60 காசுகளில் இருந்து, 24 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். பெடல் தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கூலி, சேலை ஒன்றுக்கு 85 ரூபாய்
67 காசுகளில் இருந்து, 90 ரூபாய் 29 காசுகளாகவும், வேட்டி ஒன்றுக்கு 65 ரூபாய் 75 காசுகளிலிருந்து 69 ரூபாய் 58 காசுகளாகவும் உயர்த்தி வழங்கப்படும். அதே போன்று, விலையில்லா சீருடை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கூலி, மீட்டர் ஒன்றுக்கு 11 ரூபாய் 32 காசுகளில் இருந்து, 12 ரூபாய் 16 காசுகளாக மாண்புமிகு அம்மாவின் அரசால் உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள 54 ஆயிரம் விசைத்தறி மற்றும் 10 ஆயிரத்து 500 பெடல் தறி கூலித் தொழிலாளர்கள் சுமார் 11 கோடியே 23 லட்சம் ரூபாய் அளவிற்கு பயன் பெறுவார்கள்.

தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் நபார்டு வங்கியின் மறு நிதியுதவி திட்டத்தின் கீழ் நடைமுறை மூலதனத்தை காசுக்கடனாக பெற்று வருகின்றன. அத்தகைய கடனுக்கு, தற்போது தமிழ்நாடு அரசு 4ரூ மானியமாக வழங்கி வருகிறது. தமிழ்நாடு ஒருங்கிணைந்த புதிய ஜவுளி கொள்கை 2019-ல் அறிவிக்கப்பட்டவாறு, வட்டிச் சுமையினைக் குறைக்கும் விதமாக, தொடக்க நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட்டு வரும் வட்டி மானியம் 4 விழுக்காட்டிலிருந்து 6 விழுக்காடாக உயர்த்தப்படும். இதன் மூலம் ஆண்டொன்றுக்கு ஏற்படும் செலவினம், 14 கோடியே 40 லட்சம் ரூபாயிலிருந்து 21 கோடியே 60 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் பாதுகாவலனாக விளங்கும் "பனை மரங்களுக்கு’’ மாண்புமிகு அம்மாவின் அரசு முக்கியத்துவம் அளித்து, வறட்சி மிகுந்த மானாவாரி மற்றும் கடற்கரை பகுதிகளில் பனை மரங்களை அதிக அளவில் வளர்ப்பதற்கு, முதற்கட்டமாக நடப்பாண்டில் 10 கோடி ரூபாய் செலவில் 2.5 கோடி பனை விதைகள், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் பெற்று விவசாயிகளுக்கு வழங்கப்படும். இப்பணி வருங்காலங்களிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

2. தரமான இடுபொருட்களை சேமித்து விவசாயிகளுக்கு விநியோகிக்க, மாண்புமிகு அம்மாவின் அரசு, இதுவரை 17 துணை வேளாண்மை விரிவாக்க மையங்களை உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தி உள்ளது. நடப்பாண்டிலும், 100 விதை சேமிப்புக் கிடங்குகளுடன் கூடிய இம்மையங்களை கட்டுவதற்கு 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழ்நாட்டில் நிலவும் தட்பவெட்ப நிலை, மிக நீள இழை பருத்தி சாகுபடிக்கு உகந்ததாக உள்ளதாலும், இந்த ரகங்களை சாகுபடி செய்தால், பருத்தி விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்கும் என்பதாலும், நடப்பாண்டில், மிக நீள இழைப்பருத்தி ரக விதைகள், உயிர் உரங்கள், பருத்தி அறுவடை இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு இடுபொருட்களை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க 11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
நமது உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான நுண்ணூட்டச் சத்தினை வழங்கவல்ல சிறுதானியப் பயிர்களை குறைந்த நீரில் சாகுபடி செய்ய முடியும் என்பதோடு மட்டுமல்லாமல், மண் வளம் குறைவான நிலப்பகுதிகளிலும் சாகுபடி செய்ய இயலும். எனவே, இப்பயிர்களின் சாகுபடியினை அதிகரித்து, உற்பத்தியை உயர்த்தும் வகையில், தரமான விதை விநியோகம், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் பயிர் பாதுகாப்பிற்கு தேவையான கைத்தெளிப்பான் விநியோகம் போன்ற தொழில்நுட்பங்கள் குறித்த செயல் விளக்கங்கள், கருத்தரங்கங்கள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள், பயிற்சிகள் போன்ற பணிகளுக்காக நடப்பாண்டில் 13 கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 

சென்னை வண்ணாரப்பேட்டையில், வேளாண் பொறியியல் துறைக்கு சொந்தமான 5.5  ஏக்கர் நிலத்தில் 5 கோடி ரூபாய் செலவில் நகரப்புற மக்களைக் கவரும் வகையில்  "தோட்டக்கலை பாரம்பரிய பூங்கா’’ அமைக்கப்படும்.  கரும்பு விவசாயிகள், குறித்த  நேரத்தில் சாகுபடிப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக கூட்டுறவு சர்க்கரை ஆலை,  உழவர் உற்பத்தியாளர் அமைப்பு அல்லது தனியார் தொழில் முனைவோர் மூலம்  இயந்திர வாடகை மையம் அமைக்க இயந்திரங்களுக்கான விலையில் 60 லட்சம்  ரூபாய்க்கு மிகாமல் 40 சதவிகிதம் அரசு மானியமாக வழங்கி, தற்போது 11 வாடகை மையங்கள் இயங்குகின்றன. நடப்பாண்டில், 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், கூடுதலாக கரும்பு சாகுபடி இயந்திரங்களுக்கான 10 வாடகை மையங்கள் விவசாயிகளின் நலன் கருதி அமைக்கப்படும்.

மானாவாரி விவசாயிகளின் நலனுக்காக, நடப்பாண்டில் மேலும் 150 மதிப்புக்கூட்டும் மையங்களை உருவாக்குவதற்கு 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த ஆண்டு, 243 கிராம அளவிலான பண்ணை இயந்திர வாடகை மையங்கள் 19 கோடியே 44 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும். அதிக விலையுள்ள வேளாண் இயந்திரங்களை வாங்க இயலாத விவசாயிகளுக்கு உதவும் வகையில், இவ்வியந்திரங்கள் வேளாண் பொறியியல் துறை மூலம் குறைந்த வாடகைக்கு வழங்கப்படுகிறது. விவசாயிகள் பயன்படுத்துவதற்காக இத்தகைய இயந்திரங்களை வேளாண் பொறியியல் துறை மூலம் விலைக்கு வாங்க 70 கோடியே 30 லட்சம் ரூபாய் நடப்பாண்டில் ஒதுக்கீடு செய்யப்படும்.
தென்னை அதிகம் சாகுபடி செய்யும் மாவட்டமான கன்னியாகுமரியில் தென்னை மதிப்புக் கூட்டும் மையம் ஒன்று 16 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். இம்மையத்தில் 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு உள்ள கிடங்கு, பரிவர்த்தனைக் கூடம், கடைகள், உலர்களம், சூரிய உலர்த்தி, தூய்மையான தேங்காய் எண்ணெய் உற்பத்தி அலகு, தேங்காய் மதிப்பு கூட்டும் இயந்திரங்கள் போன்ற வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.

விவசாயிகளிடையே, தரமான சான்று பெற்ற விதைகள் கிடைப்பதை உறுதி செய்ய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்குக் கிடங்கு வசதியுடன் கூடிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்காக ஒரு குழுவிற்கு 60 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டு, இதுவரை கிடங்கு வசதியுடன் கூடிய 30 விதை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டில், 12 கோடி ரூபாய் செலவில், 20 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களில் விதை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதை உறுதி செய்ய "விலை ஆதரவுத் திட்டம்’’ சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு, விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். நடப்பாண்டில் 3,000 மெட்ரிக் டன் பச்சைப் பயறு, 9,000 மெட்ரிக் டன் உளுந்து மட்டுமல்லாது, 50,000 மெட்ரிக் டன் கொப்பரையையும் அரசு நேரடியாக கொள்முதல் செய்து வருகிறது. இதற்காக 90 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும், 100 உழவர் சந்தைகளிலும் கூடுதலாக கடைகள், மின்னணு எடைமேடை, கணினி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் 268 கோடியே 62 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தி தரப்படும். உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் கடன் வசதி பெற்று தொழில் துவங்க, மூலதன உதவி, கடன் உத்தரவாதத் திட்டம், வட்டி உதவித் திட்டம் போன்ற திட்டங்கள் நபார்டு வங்கியின் "நாப்கிசான்’’ நிதி நிறுவன உதவியுடன் செயல்படுத்த நடப்பாண்டில், 266 கோடி ரூபாய் வரை கடன் உதவி அளிக்கப்படும். மதுரை, சேலம், ஈரோடு, தூத்துக்குடி, காஞ்சிபுரம் மாவட்டங்களில், பண்ணை அளவில் விளைபொருட்களை பாதுகாக்க சூரிய சக்தியால் இயங்கும் சிறிய அளவிலான குளிர்பதன அலகுகளை நிறுவிட தேவையான உட்கட்டமைப்பு வசதிகள், 100 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தி கொடுக்கப்படும்.

கிருஷ்ணகிரி, தருமபுரி, கோயம்புத்தூர், நீலகிரி, திருச்சி, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய 10 மாவட்டங்களில், பழங்கள், காய்கறிகள் மற்றும் விரைவில் அழுகும் ஏனைய பொருட்களுக்கான "விநியோகத் தொடர் மேலாண்மைத் திட்டம்’’ 482 கோடி ரூபாய் நிதியில், 509 சேகரிப்பு மையங்கள், 62  முதல் நிலை பதப்படுத்தும் அலகுகள் ஆகியவற்றை அமைக்க தேவையான  உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவை விரைவில்  செயலாக்கத்திற்குக் கொண்டு வரப்படும். மேற்கண்ட 10 மாவட்டங்கள் தவிர சேலம்,  ஈரோடு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில்,  இத்திட்டம் 100 கோடி ரூபாய் செலவில் விரிவுபடுத்தப்படும்.

பாசன நீரினை வீணாக்காமல் வயலுக்கு அருகில் கொண்டு செல்வதற்கு பாசனநீர் குழாய்களை நிறுவுதல், தரைநிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல் போன்ற துணை நீர் மேலாண்மை பணிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. அதேபோன்று, நடப்பாண்டிலும், இப்பணிகளுக்காக மாண்புமிகு அம்மாவின் அரசு 116 கோடியே 29 லட்சம் ரூபாய் செலவிடும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்து சமய அறநிலையத் துறை

இந்து சமய அறநிலையத் துறை ஆளுகையின் கீழ் இல்லாத, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள 1,000 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள ஏதுவாக, நடப்பாண்டு திருக்கோயில் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் 10 கோடி ரூபாய் நிதியுதவி திருக்கோயில் நிதியிலிருந்து வழங்கப்படும்.
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிதி வசதி இல்லாத 1,000 கிராமப்புற திருக்கோயில்களில் திருப்பணி மற்றும் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ள ஏதுவாக, நடப்பாண்டு திருக்கோயில் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் 10 கோடி ரூபாய் நிதியுதவி திருக்கோயில் நிதியிலிருந்து வழங்கப்படும் என்று கூறி அமைகிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து