கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூற சென்ற போது அனுமதி மறுப்பு: உ.பி.யில் பிரியங்கா தர்ணா
உத்தரபிரதேசத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சென்று ஆறுதல் கூற காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி சென்ற போது வழியில் அனுமதி மறுக்கப்பட்டதால் தர்ணாவில் ஈடுபட்டார்.
உத்தர பிரதேசம் மாநிலத்தின் சோன்பத்ரா எனும் இடத்தில் சமீபத்தில் இரு பிரிவினருக்கிடையே கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆதரவு கூற காங்கிரஸ் கட்சியின் உ.பி. மாநில கிழக்குப்பகுதி பொறுப்பாளரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா நேற்று காணச் சென்றார். காரில் சென்று கொண்டிருந்தபோது நாராயண்பூர் எனும் பகுதியில் போலீசார் அவரது காரை நிறுத்தினர். இங்கு வர அனுமதி இல்லை என கூறியுள்ளனர். உடனடியாக பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தொண்டர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், கலவரத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூற வேண்டும். எனக்கு இதுவே தேவை.
என் மகனின் வயதிருக்கும் ஒரு வாலிபர் சுடப்பட்டு இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்களை காண வரும்போது போலீசார் உள்ளே வர அனுமதி இல்லை என வழியில் மறுக்கின்றனர். சட்ட ரீதியாக அனுமதி மறுக்கப்பட என்ன ஆர்டர் உள்ளது? அதை காண்பியுங்கள். நான் இங்கேயே அமைதியாக இருக்கிறேன். யாரேனும் கூறுங்கள் என்று கூறி தர்ணாவில் ஈடுபட்டார்.