முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் பார்லிமெண்ட் இடைத்தேர்தலில் முதல்வர் இ.பி.எஸ் சூறாவளி பிரசாரம்: வாணியம்பாடியில் இன்று தொடங்குகிறார்

வெள்ளிக்கிழமை, 26 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாணியம்பாடியில் இன்று தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். மூன்று நாட்கள் பிரசாரம் மேற்கொண்டு அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆறு இடங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிக்கிறார்.

வேலூர் நாடாளுமன்றத்தேர்தல் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி வேட்பாளராக புதிய நீதிக்கட்சி நிறுவனத்தலைவர் ஏ.சி.சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் அடங்கிய 209 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் வீதிவீதியாக ஓட்டு வேட்டையாடி வருகின்றனர். இந்த நிலையில் முதல்வரும் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சட்டமன்றத்தொகுதிகளில் அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். நாளை கே.வி குப்பம் மற்றும் குடியாத்தம் தொகுதிகளிலும் வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி மாலை அணைக்கட்டு மற்றும் வேலூர் தொகுதிகளில் சூறாவளி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

இது குறித்து அ.தி.மு.க தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேலூர் நாடாளுமன்ற மக்களவை தொகுதிக்கான பொதுத் தேர்தல் 5.8.2019 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும்,முதல்வருமான எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.கவின் ``இரட்டை இலை’’ சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து, வருகின்ற 27.7.2019, 28.7.2019 மற்றும் 2.8.2019 ஆகிய தேதிகளில், வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாணியம்பாடி, ஆம்பூர், கீழ்வைத்தியணான்குப்பம், குடியாத்தம், அணைக்கட்டு, வேலூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு, தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

27-ம் தேதி சனிக் கிழமை மாலை 5 மணிக்கு வாணியம்பாடியிலும் மாலை 6 மணிக்கு ஆம்பூர் தொகுதியிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்வார். 28-ம் தேதி மாலை 5 மணிக்கு கீழ் வைத்தியணான் குப்பத்திலும் - மாலை 6 மணிக்கு குடியாத்தம் தொகுதியிலும் ஆகஸ்ட் 2-ம் தேதி மாலை 5 மணிக்கு அணைக்கட்டு தொகுதியிலும், மாலை 6 மணிக்கு வேலூர் தொகுதியிலும் பிரசாரம் மேற்கொள்வார் என்று அ.தி.மு.க செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து