முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் பதவிக்காக ஸ்டாலின் வெறி பிடித்து அலைகிறார் - வேலூர் பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 28 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

வேலூர் : முதல்வர் பதவிக்காக ஸ்டாலின் வெறி பிடித்து அலைகிறார் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்தார்.

வேலூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து நேற்று கே.வி.குப்பத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,

ஸ்டாலின் பேசும் போது, திட்டமிட்டு சதி செய்து இந்தத் தேர்தலை நிறுத்தி விட்டதாக சொல்கிறார். வேண்டுமென்று நாங்களா தேர்தலை நிறுத்தினோம்? எதிர்த்து போட்டியிட்டவர் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம். நாங்கள் ஒன்றும் திட்டமிட்டு சதிசெய்து இந்தத் தேர்தலை நிறுத்தவில்லை. நீங்கள் மூட்டை மூட்டையாக பணத்தை வாக்காளர்களுக்கு கொடுக்க வேண்டுமென்பதற்காக பதுக்கி வைத்திருந்த பணத்தை வருமானவரித் துறை கண்டுபிடித்து அதனால் நிறுத்தப்பட்டது தான் இந்தத் தேர்தல்.  நாம் சதி செய்துவிட்டோம் என்று ஸ்டாலின் பச்சை பொய் பேசுகிறார்.  இந்த நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரைக்கும், இந்தத் தேர்தல் தள்ளி வைப்பதற்கு முழுக்க, முழுக்க காரணம் தி.மு.க.தான். அ.தி.மு.க. எந்த காரணத்தைக் கொண்டும் தேர்தலை நிறுத்துகின்ற முயற்சியில் ஈடுபடவில்லை. எனவே, உண்மை நிலையை அறிந்து ஸ்டாலின் பேச வேண்டும். எல்லா ஆதாரமும் தேர்தல் கமிஷனிடத்தில் இருக்கிறது. அந்த வழக்கையெல்லாம் நீங்கள் சந்திக்க வேண்டிய நிலை வரும்பொழுது, நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவார்கள். 

கர்நாடகத்தில் நடந்ததைப் பற்றி பேசுகிறார், கர்நாடகத்தில் உங்கள் கூட்டணி ஆட்சி தானே நடந்தது. ஸ்டாலின் ராசியானவர். உங்களுடன் சேர்ந்திருந்த காரணத்தினால் தான் அங்கேயும் ஆட்சி போச்சு. ஆட்சிக்கும் வர முடியவில்லை, கூட்டணி ஆட்சியில் இடம்பெற்றதும் போய் விட்டது.  நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்தது.  அப்பொழுது ஸ்டாலின் ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்தார், மத்தியிலேயும், மாநிலத்திலேயும் நாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம் என்று கூறி பொய்யை மூட்டை மூட்டையாக அவிழ்த்து விட்டார். அதை மக்கள் நம்பி வாக்களித்து விட்டார்கள். பொய் பேசுவதற்கு ஒரு அளவு உண்டு. உண்மையாக இருக்குமோ என்று மக்கள் எண்ணக்கூடிய அளவிற்கு பொய்யை மாறி, மாறி எல்லா கூட்டத்திலும் சொல்லி, மக்கள் மனதில் பதியவைத்து அதனால் ஏமாற்றிப் பெற்ற வெற்றிதான் பாராளுமன்ற வெற்றி, சட்டமன்ற இடைத்தேர்தல் வெற்றி, உண்மையான வெற்றி அல்ல. நாங்கள் மனசாட்சிப்படி மக்களை சந்தித்தோம். எம்.ஜி.ஆர்., அம்மா ஆகிய இருபெரும் தலைவர்கள் வழியில் நாங்கள் நடக்கின்றோம். உண்மையை மக்களிடத்தில் எடுத்துச் சொன்னோம், இதனை செய்தோம், இதனை செய்யப் போகிறோம் என்று ஆணித்தரமாக சொன்னோம். அதனடிப்படையில் மக்கள் எங்களுக்கு வாக்களித்தார்கள்.  கிராமம் நிறைந்த பகுதி இந்தப் பகுதி.  நானும் ஒரு விவசாயி, இன்றைக்கும் விவசாயம் செய்து கொண்டிருக்கிறேன். விவசாயிக்கு ஒரு நாட்டை ஆளக்கூடிய தகுதி இல்லையா? ஒரு சாதாரண விவசாயி முதலமைச்சராக இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை, அதனால்தான் இப்படியெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். சட்டம் இயற்றுகின்ற மாமன்றம், மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கக்கூடிய இடம் சட்டமன்றம், அந்த சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு அந்த நாட்டு மக்களுக்குத் தேவையான திட்டங்கள் கொடுக்கின்ற இடமான அந்த மாமன்றத்தில், பெரும்பான்மை நிரூபிக்கவேண்டுமென்று சபாநாயகர் உத்தரவிட்டதன் பேரில்,  நாங்கள் எல்லாம் இருக்கின்றோம்.  எதிர் அணியில் இருக்கின்றவர்கள் எந்த அளவிற்கு அராஜகம் செய்தார்கள் என்பதை நாட்டு மக்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். நான் நினைத்திருந்தால் கலைத்திருப்பேன் என்று நீங்களா பேசுகிறீர்கள்.  ஒருக்காலும் அ.தி.மு.க.வையும், எங்கள் ஆட்சியையும் வீழ்த்த முடியாது. ஆட்சியை கலைக்க முடியாது, கட்சியை உடைக்க முடியாது. அம்மா மறைந்த பிறகு, ஒரு விவசாயி அந்த நாற்காலியில் அமர்ந்திருக்கின்றேன். உங்களைப்போல் பதவிக்காக நாங்கள் வெறி பிடித்து திரியவில்லை. நீங்கள் நல்லதை நினைத்து நல்லது செய்திருந்தால் அந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கும். உங்கள் எண்ணமும் நல்லது கிடையாது, உங்கள் நினைப்பும் நல்லது கிடையாது, அதனால் உங்களுக்கு நல்லது நடக்காது. அ.தி.மு.க.வை பொறுத்தவரைக்கும் நாட்டு மக்களுக்கு நன்மை செய்கின்ற இயக்கம்.  பாராளுமன்ற மேலவை உறுப்பினராக சிறுபான்மையினத்தைச் சார்ந்த முகமத் ஜான் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றார். அவர் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் தான். அவருக்கு ஒரு வாய்ப்பை இந்த அ.தி.மு.க. வழங்கியிருக்கிறது. அதே போன்று தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சந்திரசேகரனும் பாராளுமன்ற மேலவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இது ஒரு ஜனநாயக கட்சி. ஆனால் தி.மு.க. போன்று அவர்களது கைத்தடிகளுக்கு பதவி வழங்குவதில்லை.  சட்டமன்றத்திலே தி.மு.க. உறுப்பினர்கள் உதயநிதி புகழ் பாடிக்கொண்டிருக்கிறார்கள் என்றால், கட்சியில் இதுவரை உழைத்தவர்களுக்கு என்ன மரியாதை உள்ளது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். நான் ஒரு சாதாரண விவசாயி. விவசாயிகளுக்கு என்ன பிரச்சனை என்பதை நன்கு தெரிந்தவன். அதற்கு ஏற்றாற் போல் தான் இந்த அரசு விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஒரு சாதாரண விவசாயி இந்த நாட்டை ஆள்வதை, ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. விவசாயிகளுக்கு என்றென்றும் பாதுகாப்பாக இருப்பது அம்மாவின் அரசு. 

சட்டமன்ற இடைத்தேர்தலில் நாங்கள் உண்மையான வாக்குறுதிகளை அளித்து 9 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். அவர்கள் பொய்யான வாக்குறுதிகளைக் அளித்து 13 தொகுதியில் வெற்றி பெற்றார்கள். விவசாய தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.6000 என ஆண்டுக்கு ரூ.72000 வழங்குவோம் என தெரிவித்தார்கள். நாட்டின் மொத்த பட்ஜட் தொகையை ஒதுக்கினாலும் கூட கொடுக்க இயலாது. வங்கியில் 5 பவுனுக்கு குறைவாக அடகு வைத்த நகைக் கடன் தள்ளுபடி.  மற்றும் கல்விக் கடன் அத்தனையும் ரத்து செய்யப்படும் போன்ற பொய்யான வாக்குறுதிகளை அளித்து வாக்குகளைப் பெற்றார்கள். தற்போது மத்தியிலும் ஆட்சி இல்லை, மாநிலத்திலும் ஆட்சியில்லை கொடுத்த வாக்குறுதிகளை எப்படி  நிறைவேற்றுவார்கள். இங்கு வந்திருக்கும் அனைவரும் அம்மா அரசால் வழங்கப்படும் ஏதேனும் ஒரு நலத்திட்டத்தினை கண்டிப்பாக பெற்றிருப்பீர்கள்.

அதிக அளவில் உணவு தானிய உற்பத்தி செய்வதற்காக ‘கிரிஷ் கர்மா விருது’ பெற்று தமிழ்நாடு வேளாண்மையில் முதலிடம் வகிக்கிறது. இந்த மாவட்டத்தைச் சேர்ந்த  அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பொது மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஒரு சில அறிவிப்புகளை இங்கு வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். கே.வி. குப்பத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அமைக்கப்படும். வேலூர் மாவட்டத்தில் விடுபட்ட இடங்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். கே.வி.குப்பம் - கவசம்பட்டில் பாலாற்றின் குறுக்கே தரை தடுப்பணை அமைக்கப்படும். குடியாத்தம் தொகுதி தட்டபாறை  - மீனூர் இடையே கௌண்டன்யா நதியின் குறுக்கே புதிய பாலம் கட்டப்படும். எனவே, இது போன்ற எண்ணற்ற திட்டங்கள் இந்த தொகுதியில் நிறைவேற்றிடும் வகையில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் ஏ.சி. சண்முகத்திற்கு எம்.ஜி.ஆர். அம்மா ஆகியோர் கட்டிக்காத்த வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னத்திலே வக்களித்து அவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து