முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் சி.பி.ஐ காவல் செப்டம்பர் 2 வரை நீட்டிப்பு

வெள்ளிக்கிழமை, 30 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் சி.பி.ஐ. காவலை செப்டம்பர் 2-ம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.  

 ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில் ப. சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு கடந்த 20-ந் தேதி தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் 21-ந்தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்தனர்.

அவரை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு, டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி, சி.பி.ஐ. அதிகாரிகள் ப.சிதம்பரத்தை தங்கள் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவரது விசாரணைக் காவல் நிறைவடைந்ததை தொடர்ந்து 26-ம் தேதி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

அப்போதும், சி.பி.ஐ. தரப்பில் ப. சிதம்பரத்திடம் விசாரணை நடத்த மேலும் ஐந்து நாட்கள் சி.பி.ஐ. காவலில் எடுக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, ப.சிதம்பரத்தின் சி.பி.ஐ. காவலை 30-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார் நீதிபதி.

இந்நிலையில் சிதம்பரத்தின் சி.பி.ஐ. காவல் முடிவடைந்ததால் நேற்று மதியம் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சி.பி.ஐ. தரப்பினர், இன்னும் விசாரணை நடத்த உள்ளதால் சி.பி.ஐ காவலை மேலும் 5 நாள் நீட்டிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

சி.பி.ஐ. காவல் குறித்த வழக்கு செப்டம்பர் 2-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதால் சி.பி.ஐ. காவலில் இருக்க தயார் என சிதம்பரம் தரப்பினர் தெரிவித்தனர். இதையடுத்து, பசிதம்பரத்தின் சி.பி.ஐ. காவலை செப்டம்பர் 2-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து