முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை  : வேலூர், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் அவ்வப்போது லேசான மழை பெய்து பூமியை குளிர்வித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே மழை பெய்வது போன்று அவ்வப்போது கருமேகங்கள் சூழ்ந்து இதமான சூழல் காணப்படுகிறது. சென்னையை பொறுத்தமட்டில் காலையில் வெயில் வறுத்தெடுக்கும் நிலையில், மாலையில் மேகம் சூழ்ந்து காணப்படும். ஆங்காங்கு லேசான மழையும் பெய்கிறது. இந்த நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. வெப்பச்சலனம், காரைக்கால் அருகே கீழ் அடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று ஆகிய காரணங்களால் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், காரைக்கால், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஆகிய 15 மாவட்டங்களில் சேலானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலையை பொறுத்தவரை சென்னையில் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து