முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கின்னஸ் சாதனை முயற்சிக்காக ஆணிப்படுக்கையில் 100 ஆசனம் செய்து அசத்திய கல்லூரி மாணவர்

வியாழக்கிழமை, 12 செப்டம்பர் 2019      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - திண்டுக்கல்லில் ஆணிப்படுக்கையில் 100 ஆசனம் செய்து அசத்திய கல்லூரி மாணவருக்கு கின்னஸ் சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
திண்டுக்கல் அருகிலுள்ள குள்ளனம்பட்டியைச் சேர்ந்த காளிமுத்து மகன் தீபக்குமார்(19). இவர் திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரியில் 2ம்ஆண்டு படித்து வருகிறார். சிறுவயது முதலே யோகாசனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் தற்போது கின்னஸ் சாதனை முயற்சியாக 1591 ஆணிகள் கொண்ட படுக்கையில்அமர்ந்தவாறு 100 ஆசனங்கள் செய்து அசத்தினார். அவரது இந்த சாதனை நோபிள் புக் கின்னஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரியில் நடந்த இந்த சாதனை யோகாசனத்தை 32 நிமிடங்கள் 40 செகண்டுகளில் செய்து முடித்தார். இந்த சாதனை குறித்து மாணவர் தீபக்குமார் தெரிவிக்கையில், யோகாசனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட எனக்கு இதுகுறித்து சாதனை செய்ய வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை இருந்தது. இதனை அறிந்து கல்லூரியின் முதன்மை செயல் அலுவலர் ரத்தினம், இயக்குனர் துரை ரத்தினம் ஆகியோர் அறிந்து எனது சாதனையை வெளிப்படுத்த மிகவும் உறுதுணையாக இருந்தனர். அவர்களது துணையாலேயே இந்த சாதனை நிறைவேற்ற முடிந்தது.
இதற்காக கடந்த 7 மாதம் கடுமையான பயிற்சியை மேற்கொண்டேன். எனது தந்தை கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். தாய் வீட்டு வேலைகளை கவனித்து வருகிறார். எனது ஒரே அண்ணன் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். எனது யோகாசன சாதனை மூலம் என் குடும்பத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நினைத்தேன். தற்போது அந்த முயற்சிக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்துள்ளதாக நினைக்கிறேன். இதன் மூலம் அடுத்த கட்ட சாதனைக்கு முயற்சிக்க உள்ளேன் என்றார்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் பாலகுருசாமி, உடற்கல்வி இயக்குனர் ராஜசேகர், ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால், நோபிள் புக் நிறுவன அதிகாரிகள் அரவிந்த் ஜெயபிரதாப், திண்டுக்கல் யோகா சங்க செயலாளர் நித்யா ராஜேஸ்வரன், வெங்கடேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாணவர் தீபக்குமருக்கு கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து