நேர்மையான நோக்குடன் பணியாற்றினால் அதற்கேற்ற முடிவுகள் கிடைக்கும்: கோலி

ராஞ்சி : நேர்மையான நோக்குடன் நாம் பணியாற்றும் வரை அதற்கேற்ற முடிவுகள் நமக்கு கிடைத்து கொண்டே இருக்கும் என விராட் கோலி கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது. இதனை தொடர்ந்து நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு பின் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேசும் பொழுது, நேர்மையான நோக்குடன் நாம் தொடர்ந்து பணியாற்றும் பொழுது, அதற்கேற்ற முடிவுகள் நம்மை பின்தொடரும். டெஸ்ட் கிரிக்கெட்டில் நாம் சிறந்த அணியாக இருக்க வேண்டும் என்று விரும்பினோம். அதற்காக நாம் தொடர்ந்து போட்டியிடும் வரை பலன்களும் சிறந்த முறையில் கிடைக்கும் என்று கூறினார். இந்த போட்டிகளில் சுழற்பந்து வீச்சாளர்கள் 34 விக்கெட்டுகள் வீழ்த்தி அணி வெற்றி பெற உதவினர். இதுபற்றி கூறிய அவர், சுழற்பந்து வீச்சு எப்பொழுதும் நம்முடைய வலிமை. பேட்டிங் செய்வது நமக்கு ஒருபொழுதும் பிரச்சனை இல்லை. இஷாந்த் அனுபவம் வாய்ந்த ஒரே வீரர். ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் நாம் அதிக ரன்களை குவித்துள்ளோம். எதிரணியினரை வீழ்த்தும் வகையில் கேட்ச் செய்வதிலும் நம்முடைய அணி வீரர்கள் திறமையாக செயல்படுகின்றனர். அதிக அனுபவமின்றி கூட, நாம் சிறப்புடன் விளையாடி உள்ளோம். எந்த இடத்திலும் நாம் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார். இதனை ஒப்பு கொள்வது போல் தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பிளெஸ்சிஸ் கூட, இந்திய அணியின் பந்து வீச்சாளர்களின் திறமையே அவர்களது வெற்றிக்கு காரணம் என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். எல்லா நேரங்களிலும் அவர்கள் சரியான இடத்திலும், ஸ்டம்புகளை வீழ்த்தும் வகையிலும் பந்துகளை வீசினர் என்று கூறினார். விராட் கோலி தலைமையிலான இந்திய அணியானது சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 11 முறை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.