முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் முதலீடு செய்ய வாருங்கள் - நியூயார்க் தமிழர்களுக்கு ஓ.பி.எஸ். அழைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வாருங்கள். தமிழக அரசு உங்களுக்கு எல்லா உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறது என்று அமெரிக்காவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார்.

நியூ யார்க்கில், உலக தமிழ் இளைஞர் பேரவை சார்பாக நடைபெற்ற விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது,

உலகின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபா நிறுவனத்தின் தலைவரான ஜாக் மா, தொழில் தொடங்குவது குறித்து கூறியுள்ள கருத்தை இங்கே எடுத்துக் கூற விரும்புகிறேன். ஒரு குழந்தைக்கு முன்னால் ஒரு ஐஸ் கிரீமையும், 2000 ரூபாய் நோட்டையும் காட்டினால், அந்த குழந்தை ஐஸ் கிரீமைத் தான் எடுத்துக் கொள்ளும். அதற்கு 2000 ரூபாயில் எத்தனை ஐஸ் கிரீம்களை வாங்க முடியும் எனத் தெரியாது. அதுபோலவே, இன்றைய உலகில் இருக்கும் இளைஞர்களிடம், ஒரு நல்ல வேலைக்கான அப்பாயிண்ட்மென்ட் கடிதத்தையும் அல்லது ஒரு நல்ல தொழிலோ , வியாபாரமோ செய்வதற்கான ஐடியாவையும் கொடுத்தால், அவர்கள் அந்த வேலையைத்தான் தேர்வு செய்கிறார்கள். அந்த பச்சைக் குழந்தையைப் போல என்கிறார் ஜாக் மா. இத்தகைய இளைஞர்களிடம் அவர்களிடம் ஒளிந்திருக்கும் திறமையை அவர்களுக்கு உணர்த்தி அவர்களுடைய வலிமையை அவர்களுக்கு புரியச் செய்து ஐஸ்கிரீமை எடுத்துக் கொள்கின்ற குழந்தைகளாக இல்லாமல், தொழில் தொடங்கும் ஐடியாவைப் பெற்றுக் கொள்ளும் ஜாக் மா இளைஞர்களாக அவர்களை உருவாக்கி, வழிகாட்டி, வாழ்விலே உயரச் செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. எனவே, இளைய தலைமுறையிடம் நம்பிக்கை வைத்து அவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்து அவர்களது புதிய சிந்தனைகளை மனம் உவந்து ஏற்று அதைச் செயல்படுத்திட அவர்களுக்கு வழி அமைத்துத் தந்து புதிய சமுதாயம் படைத்திட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

நீங்கள், உங்களுடைய கடும் உழைப்பால், அறிவின் திறத்தால், அன்பான அணுகு முறையால், பண்பான பழகும் விதத்தால், உங்களது முயற்சிகளில் வெற்றி கொண்டு, இந்த அளவுக்கு நீங்கள் உயர்ந்திருக்கீறீர்கள். தமிழகத்தின் முதலீடு செய்யுங்கள். புதிய தொழில் தொடங்கும் உங்களுடைய புதுமைச் சிந்தனைகளை தமிழ்நாட்டில் அரங்கேற்றுங்கள். உங்கள் அனுபவங்களை தமிழ் இளைஞர்களுக்கு அள்ளித் தாருங்கள். உங்களது வெற்றியால் தமிழ் கூறும் நல் உலகைபெருமை அடையச் செய்யுங்கள் என்று கூறி எனது அழைப்பை விடுத்து, உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அரசு தயாராக இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து