முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய மக்கள் தொகை பதிவேடு விவகாரத்தில் ஸ்டாலின் மக்களை குழப்பி நாடகமாடி சூழ்ச்சி செய்கிறார் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

சனிக்கிழமை, 28 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சேலம் : தேசிய மக்கள் தொகை பதிவேடு விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் மக்களை குழப்பி அரசியல் நாடகமாடி சூழ்ச்சி செய்கிறார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சேலம் விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விபரம் வருமாறு:-

மக்களுக்கு மகிழ்ச்சி

கேள்வி: நல்லாட்சியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்பதை மத்திய அரசு அறிவித்துள்ளது குறித்து உங்கள் கருத்து என்ன?
 பதில்: உண்மையிலேயே தமிழகத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய அளவில் இந்த அறிவிப்பு இருக்கிறது. ஒட்டுமொத்த தமிழக மக்களுக்குக் கிடைத்த வெற்றியாக நான் இதைக் கருதுகிறேன். அதற்காக பாடுபட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, அதிகாரிகள் அனைத்துத் துறைகளிலும் அதிக கவனம் செலுத்தி சிறப்பான முறையில் பணியாற்றிய காரணத்தினால் இன்றைக்கு இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்த ஆளுமைத் திறன்மிக்க மாநிலம் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. இதற்காக பாடுபட்ட அதிகாரிகள், அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு என் மனமார்ந்த, உளமார்ந்த நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிபாரிசு கிடையாது

கேள்வி: இதுகுறித்து விமர்சனங்கள் கடுமையாக வந்துள்ளதே? தி.மு.க.-வினர் விமர்சனம் செய்துள்ளனரே?
பதில்: ஊடக, பத்திரிகை நண்பர்கள் இப்பொழுது தான் வாழ்த்து செய்தி தெரிவித்தீர்கள். கட்டடத்திற்கு அஸ்திவாரம் இருப்பது போல் ஒரு நாட்டினுடைய நிகழ்வுகளை மக்களுக்கு எடுத்துச் செல்வது ஊடகங்கள் தான். ஸ்டாலின் அவர்களுக்கு எப்பொழுதும் அ.தி.மு.க. அரசை குறை சொல்வது தான் வழக்கம். மத்திய அரசாங்கம். இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் 50 வகையான காரணிகளைக் கொண்டு ஆய்வு செய்து, துறைவாரியாக மதிப்பெண் கொடுத்து, தரவரிசைப் பட்டியலில் 5.62 மதிப்பெண் கொடுத்து ஆளுமைத் திறன்மிக்க மாநிலம் என்ற அறிவிப்பைக் கொடுத்து தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. இது தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளதோடு, தமிழ்நாட்டு மக்களுக்கும் மிகவும் பெருமைக்குரியது. இதில் எந்தவிதமான சிபாரிசும் கிடையாது. யூனியன் பிரதேசத்தில் பாண்டிச்சேரிக்கு கிடைத்திருக்கிறது. பாண்டிச்சேரி காங்கிரஸ் ஆளுகின்ற மாநிலம், பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்யாமல் வேறு கட்சி ஆட்சி செய்யும் மாநிலத்திற்கும் கிடைத்துள்ளதே.
கேள்வி: பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஜனவரி 16 - ம் தேதி மாணவர்கள் வர வேண்டுமென்று தெரிவித்துள்ளனரே?
பதில்: கல்வித் துறை விளக்கம் கொடுத்துவிட்டார்கள். தொலைக்காட்சிப் பெட்டி இல்லாதவர்கள், விருப்பப்பட்டால் பள்ளியில் வந்து பாரதப் பிரதமர் அவர்களின் உரையை பார்த்துக் கொள்ளலாம். இது கட்டாயமில்லை.
கேள்வி: ஊரக தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடைகோரி நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளதே?
பதில்: நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இதுதொடர்பாக, தேர்தல் ஆணையம் தான் பதில் சொல்ல வேண்டும். இது தேர்தல் ஆணையத்தால் எடுக்க வேண்டிய முடிவு, மாநில அரசு அல்ல.

யாரும் தலையிட முடியாது

கேள்வி: இதில் அ.தி.மு.க. -வின் நிலைப்பாடு என்ன?
பதில்: அ.தி.மு.க.-வைப் பொறுத்தவரை, பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால், தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தல் நடைமுறை வந்து விடுகிறது. அதில் யாரும் தலையிட முடியாது என்பது தான் நீதி. மற்ற மாநிலங்களிலும் இது போல் நடைபெற்றுள்ளது. மற்ற மாநிலங்களிலும் ஊரகப் பகுதிகள், மாநகராட்சி ஆகியவற்றிற்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றுள்ளது. இவையெல்லாம் வரலாறு. உள்நோக்கத்தோடு ஒவ்வொருவரும் வழக்குப் போடுகின்றார்கள். சுதந்திரமாக தேர்தல் நடக்கின்றது, இதில் யாருடைய தலையீடும் இல்லை, யார் வெற்றி பெற வேண்டுமென்று மக்கள் தான் தீர்மானிக்கின்றார்கள். வாக்குகள் எண்ணப்பட்டு அறிவித்த பிறகு தான் வெற்றி பெற்றவர்கள் யார் என்பதே தெரியும். இது மறைமுகத் தேர்தல், வாக்களித்தவர்களுக்கு மட்டுமே தெரியும், அச்சப்பட வேண்டிய அவசியமில்லை.
கேள்வி: ஆளும்கட்சி அத்துமீறல் என்று சொல்கின்றார்களே?
பதில்: அத்துமீறல் என்று தி.மு.க. தான் சொல்லும். எந்த இடத்தில் என்ன தகராறு என்பது அந்தந்தப் பகுதி மக்களுக்கு நன்றாகத் தெரியும். விவரம் தெரிந்த பிறகு தான் அதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியும். இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை ஒன்றியக் கவுன்சிலர், மாவட்டக் கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு மட்டுமே கட்சி ரீதியாக நடைபெறும்.
கேள்வி: தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் தமிழ்நாட்டின் நிலை என்ன? கணக்கெடுப்பு எப்பொழுது தொடங்குகிறது ?
பதில்: ஊடகம், பத்திரிகைகள் வாயிலாக நான் நாட்டு மக்களுக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புவது  1872 - ம் ஆண்டு, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி, 1948 - ம் ஆண்டு அதற்கென்று ஒரு தனிச் சட்டம் இயற்றியுள்ளார்கள். அதிலிருந்து 1951, 1961, 1971, 1981, 1991, 2001, 2011 என ஒவ்வொரு 10 ஆண்டுகள் வருகின்ற பொழுது மக்கள்தொகை கணக்கெடுக்கப்படுகிறது. இந்தக் கணக்கெடுப்பு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் மூலம் மக்களுடைய பொருளாதாரம் என்ன என்பதை தெரிந்துகொள்ள முடியும். 1955 - ம் ஆண்டு திருத்தம் கொண்டு வந்தார்கள். பின்னர், 2003 - ம் ஆண்டு திருத்தம் கொண்டு வந்தார்கள். 2003 - ம் ஆண்டு மத்தியில் பாரதீய ஜனதா கட்சி தான் ஆட்சியிலிருந்தது. அப்பொழுது திராவிட முன்னேற்றக் கழம் அங்கம் வகித்தது. 2010 - ம் ஆண்டு, 2003 - ம் ஆண்டு கொண்டு வந்த திருத்தச் சட்டத்தின்படி, தேசிய மக்கள்தொகை பதிவேடு என்ற அடிப்படையில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசாங்கம் செயல்படுத்தியது. அப்பொழுதும் மத்திய அரசில் தி.மு.க. அங்கம் வகித்திருந்தது. அந்தக் காலக்கட்டத்தில் தான் தேசிய மக்கள் தொகை பதிவேடு முறையை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தினார்கள். திருத்தம் மற்றும் அமல்படுத்தும் பொழுதும் தி.மு.க. தான் மத்திய அரசில் இடம் பெற்றிருந்தது. ஆனால், இப்பொழுது, அதை எதிர்க்கின்றார்கள். வேண்டுமென்றே திட்டமிட்டு அரசுக்கு நெருக்கடி கொடுக்கின்றார்கள். 2010 - ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மன்மோகன்சிங் பாரதப் பிரதமராக இருந்தபொழுது நடைமுறைப்படுத்தியதையே நாங்களும் நடைமுறைப்படுத்தியுள்ளோம் என மத்திய அரசாங்கமும், மத்திய உள்துறை அமைச்சரும் தெளிவாகத் தெரிவித்துள்ளனர். எந்த மாற்றமும் கிடையாது. தேசிய குடியுரிமை பதிவேடு என்பது வேறு. நாங்கள் கணக்கெடுக்கவில்லை.

மக்களை குழப்பும் எதிர்கட்சிகள்

அவர்கள் தான் மக்களை குழப்புகின்றார்கள். மக்களிடத்தில் செல்வாக்கு இல்லாத கட்சிகள் ஒன்றாக சேர்ந்து வேண்டுமென்றே திட்டமிட்டு மத்திய, மாநில அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டுமென்ற அடிப்படையில் மக்கள்தொகை கணக்கெடுப்பை எதிர்க்கின்றார்கள் என்று நான் கருதுகின்றேன். இதற்கு மேலும் போராட்டம் நடத்துவோம் என்று சொன்னால் என்ன செய்ய முடியும் ?. மு.க.ஸ்டாலின் மக்களை குழப்பி, அரசியல் நாடகமாடி, சூழ்ச்சி செய்கிறார் என்பதை பொதுமக்களும், இளைஞர்களும், சிறுபான்மையின மக்களும் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

கேள்வி: தமிழகத்தில் எப்பொழுது கணக்கெடுப்பு தொடங்கும்?
பதில்:  மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பைப் பொறுத்தவரை, குடும்பத் தலைவர் பெயர், சொந்த வீடு உள்ளதா? வீட்டிலுள்ள அறைகள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, குளியலறை வசதி, சமையல் எரிபொருள், ரேடியோ, டிவி, கம்யூட்டர், இன்டர்னெட் வசதி, தொலைபேசி வசதி, வாகன வசதி உட்பட 34 விவரங்கள் அதில் பதிவு செய்கிறார்கள். அதைத் தான் முதற்கட்டமாக எடுக்கின்றார்கள். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை அடுத்த வருடம் தான் எடுக்கின்றார்கள். இதைப் பொறுத்தவரை ஒரு குடும்பத்தை தனித்தனியாக பிரிக்கின்றார்கள். குடும்பத்திலிருந்து ஒட்டுமொத்தமாக எடுப்பது சென்ஷஸ்.

சென்ஷஸ் சட்டப்படி இதை யாரும் வெளியிட முடியாது. ஆனால், என்.பி.ஆர். - ஐ வெளியிட முடியும். என்.பி.ஆர். - ல் தான் ஒரு குடும்பத்தில் எத்தனைபேர் இடம்பெற்றிருந்தாலும், தனித்தனியாக விவரங்களை எடுக்கின்றார்கள். அதிலே, குடும்பத் தலைவர் பெயர், பெற்றோர் பெயர், திருமண விவரம், கணவர் பெயர், மனைவி பெயர், பாலியல் விவரம், பிறந்த தேதி, பிறந்த இடம், தற்காலிக முகவரி, நிரந்தர முகவரி, தொழில், கல்வித் தகுதி, உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்யப்படுகிறது. அதுமட்டுல்ல, மத்திய அரசும், உள்துறை அமைச்சர் அவர்களும் தெளிவுபடுத்தியிருக்கிறார். ஊடகம், பத்திரிகை வாயிலாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 மாதம் குடியிருந்தாலும் போதும் என்கிறார்கள். அப்படியில்லையென்றால் தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் மத்திய அரசு தெளிவுபடுத்துவது 6 மாதம் குடியிருந்தாலே எடுக்கலாமென்றும் அல்லது 6 மாதம் தொடர்ந்து இங்கே வசித்தாலும், அதனையும் எடுக்கலாம் என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். இதில் எந்தவித பிரச்சினையும் கிடையாது. இதில் யாரும் பாதிக்கப்படப்போவது இல்லை. அதில் இந்திய நாட்டில் வாழ்கின்ற இந்தியர்கள் எவரும் இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று மத்திய அரசு தெளிவாக தெரிவித்திருக்கிறது. மு.க.ஸ்டாலின் மற்றும் அவருடன் கூட்டணியில் அங்கம் வகித்துள்ள கட்சிகளெல்லாம், வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு தவறான பிரச்சாரத்தை தமிழகத்தில் பரப்பி வருகின்றனர்.

கேள்வி: கோவையில் பாலியல் வன்முறை குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதற்கு உங்களுடைய கருத்து என்ன?
பதில்: நீதிமன்றத் தீர்ப்பை நாம் மதிக்க வேண்டும். நீதிபதி அவர்களின் தீர்ப்பு தான் இறுதியானது.
கேள்வி: கடந்த 3 ஆண்டுகளாக மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை, இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றார்களே?
பதில்: ஏற்கனவே மருத்துவ இடஒதுக்கீடு பற்றி தெளிவுபடுத்தியுள்ளேன். தமிழ்நாட்டில் தான் மருத்துவப் படிப்பிற்கான இடஒதுக்கீடு அதிகம். கடந்த ஆண்டு மட்டும் 350 மருத்துவ மாணவர்கள் புதிதாக படிப்பதற்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக மாணவர்களை சேர்ப்பதற்கு மத்திய அரசாங்கத்திடமிருந்து அனுமதி பெற்றுள்ளோம். இந்த ஆண்டு 9 அரசு மருத்துவக் கல்லூரிகளை தமிழகத்திற்கு ஒரே ஆண்டில் பெற்று, வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை ஏற்படுத்தி, சாதனை படைத்த அரசு அம்மா அவர்களின் அரசு.

9 மருத்துவக் கல்லூரி வரும் பொழுது புதிதாக 900 மருத்துவர்கள் வரவிருக்கின்றார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சிறந்த மருத்துவ சேவை செய்ய வேண்டுமென்ற எண்ணத்தின் அடிப்படையில் அம்மாவின் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த அடிப்படையில் மத்திய அரசிடம் நிதியுதவி பெற்று, மாநில அரசும் நிதியுதவி அளித்து 9 அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படவிருக்கிறது. இப்பொழுது 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு டெண்டர் விடப்பட்டிருக்கிறது. மேலும் 3 மருத்துவமனைக்கு டெண்டர் விடப்படும். விரைவாக இந்தப் பணி தொடங்கப்பட்டு ஒரே ஆண்டில் நிறைவு பெறும். அற்புதமான, சிறப்பான மருத்துவக் கல்லூரிகளாக இருக்கும். தனியார் மருத்துவமனையைவிடவும் கூடுதலான வசதிகளை ஏற்படுத்தி சிறந்த மருத்துவமனையை நாங்கள் நிறைவேற்றித் தருவோம்.

போராட்ட அறிவிப்பை கைவிட வேண்டும்

கேள்வி: மின் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 8-ந் தேதி முதல் ஸ்டிரைக் நடத்த உள்ளது குறித்து ?.
பதில்: ஏற்கனவே மின் ஊழியர்கள் வைத்த பெரும்பான்மையான கோரிக்கைகளை அம்மாவுடைய அரசு நிறைவேற்றி இருக்கிறது. இதை மின் ஊழியர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். தற்போது நம்முடைய தமிழ்நாடு மின்சார வாரியம் கடுமையான நிதி நெருக்கடியிலே இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையும் அவர்களுக்கு நன்றாக தெரியும். இப்படி இருந்த காலக்கட்டத்தில் கூட, அவர்கள் வைத்த பெரும்பான்மையான கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ள அரசு எங்களுடைய அரசு என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். ஆகவே அவர்கள் போராட்ட அறிவிப்பை கைவிட்டுவிட்டு அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஏன் என்றால், மின்சாரத் துறை என்பது மிகப் பெரிய துறை, மிக முக்கியமான துறை. ஆகவே, ஒரு நாட்டினுடைய வளர்ச்சி மின்சாரத்துறையை வைத்து தான் இருக்கிறது. ஆகவே, தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும் மின் உற்பத்தியை அதிக அளவிலே பெருக்கி, மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தேவையான மின்சாரத்தை வழங்கி கொண்டு இருக்கிறது. இதற்கு எல்லாம் உதவிபுரிகின்ற விதத்திலே மின் ஊழியர்கள் அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.  

கேள்வி: நெல் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை குறித்து ?.
பதில்: ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஒரு குறிப்பிட்டத் தொகை உயர்த்தப்பட்டு வருகிறது. எனவே, இது தொடர்பாக அந்த துறையினுடைய அமைச்சரை கலந்தலோசித்து தான் முடிவு செய்யப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து