முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.வுக்கு இலங்கைத் தமிழர் குறித்துப் பேச தார்மீக உரிமை இல்லை : முதல்வர் எடப்பாடியாரை உண்மைக்கு புறம்பான பிரச்சாரம் மூலம் மு.க.ஸ்டாலின் வீழ்த்த முயற்சித்தால் அது பயனளிக்காது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காட்டமான அறிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 29 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : முதல்வர் எடப்பாடியாரை உண்மைக்கு புறம்பான பிரச்சாரம் மூலம் மு.க.ஸ்டாலின் வீழ்த்த முயற்சித்தால் அது பயனளிக்காது என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் வெறுப்பை அள்ளி வீசுவதைக் கண்டித்து,  தமிழ்நாடு வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- 

கனவு கோட்டை கட்டியவர்

   இந்திய மாநிலங்கள் அனைத்தோடும் ஒப்பிடுகையில் தமிழ்நாடு ஆளுமைத் திறனில் முதலிடம் பெற்ற மாநிலமாக விளங்குவதாக மத்திய அரசு நடத்தியிருக்கும் ஆய்வின் முடிவுகள் பாராட்டியிருப்பதைக் கண்டு பொறாமைத் தீயில் வெந்து கொண்டிருக்கும் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின், முதலமைச்சர் மீதும், அ.தி.மு.க.அரசு மீதும் கொண்டிருக்கும் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அம்மாவின் அகால மறைவிற்குப் பிறகு அ.தி.மு.க.உடைந்துவிடும், கழக அரசு முடிந்து விடும். அதன் மூலம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவியில் அமர்ந்து கொண்டு தங்கள் குடும்பத்தின் அராஜக ஆட்சியை தமிழ்நாட்டில் நிலைநாட்டிக் கொள்ளலாம் என்று கனவுக் கோட்டை கட்டியிருந்தவர் மு.க.ஸ்டாலின்.

தீய சக்திகளை ஒழித்து, மக்களுக்கான ஆட்சியை அமைப்பதற்காக உருவாக்கப்பட்ட அ.தி.மு.க. அம்மாவின் மறைவிற்குப் பிறகு அசைக்க முடியாக இரும்புக் கோட்டையாகத் திகழ்கிறது. அரசியல் வானில் எத்தனை அடைமழை, புயல் எழுந்து வீசினாலும் அசைக்க முடியாத ஆலமரமாகக் கொள்கைவழி வந்த வீரர்களின் வெற்றிப்படையாக, அ.இ.அ.தி.மு.க பீடுநடை போட்டு வருவதைத், தாங்கமுடியாத தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் எளிமை, பணிவு, அனைவரிடமும் அன்புடன் நடந்துகொள்ளும் இயல்பு, அவரது அரசியல் பயணத்தின் வெற்றிகள் ஆகியவற்றை புரிந்துகொள்ளாமல் சிறு பிள்ளைத்தனமாகவும், பொறுப்பற்றும் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் வெறுப்பை உமிழ்ந்து, அறிக்கை வெளியிட்டிருக்கிறாரே தவிர, கழக அரசின் சாதனைகள் குறித்தோ முதலமைச்சரின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்தோ எவ்விதமான அறிவுப்பூர்வமான கருத்துக்களையும் குறித்தோ இதுநாள்வரை கூறியதில்லை என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

மத்திய அரசு பாராட்டு

அனைத்து மாநிலங்களின் ஆளுமைத்திறனை பல்வேறு பிரிவுகளில் ஆய்வு செய்து, அதற்கு மதிப்பெண் வழங்கி பட்டியலிடும் மத்திய அரசு. இந்த ஆண்டு வெளியிட்டிருக்கும் தர வரிசையில், ஆளுமைத் திறனில் தமிழ்நாடுதான் முதன்மை மாநிலம்” என்று பாராட்டியிருக்கிறது.  சட்டம் - ஒழுங்கு பராமரிப்பிலும், மக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்குவதிலும் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக மத்திய அரசு வெளியிட்டிருக்கும் ஆய்வு முடிவை பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசை பாராட்டியிருக்க வேண்டாமா ?  இன்னும் சிறப்புடன் மக்கள் பணியாற்ற ஆலோசனை தந்திருக்கலாமே ! அதைவிடுத்து மத்திய அரசின் ஆய்வின் முடிவையே கேலிக்கூத்தாக்கியிருக்கிறாரே ?. இதுதான் கடந்த 70 ஆண்டுகளாக நிர்வாகத்தில் ஏதேனும் ஒரு வகையில் பங்குபெற்றிருக்கும் அவரது குடும்பம் அவருக்குக் கற்றுத் தந்த பக்குவமா ? பண்பாடா ?

வெட்கக்கேடு

 இதே தரவரிசைப்பட்டியலில் பாராட்டத்தக்க இடத்தைப் பெறாமல் தமிழ்நாடு கீழே தள்ளப்பட்டிருந்தால், அதை தூக்கி வைத்துக் கொண்டு அரசுக்கு எதிராக முழுங்கிக்கொண்டிருப்பார் மு.க.ஸ்டாலின்.  “ஆறு நாளில் கலைந்து விடும்” என்று ஆசைக்கோட்டை கட்டியிருந்த ஸ்டாலின் ஆயிரம் ஆண்டுகள் நிலைபெறும் அரசாக இந்த அரசு சாதனை புரிந்து வருவதை தாங்கிக்கொள்ள முடியாமல் இப்படி மனம் புழுங்கி அறிக்கை வெளியிடுவது வெட்கக்கேடானது.

கடந்த 30 ஆண்டுகளாக தேர்தல் களத்தில் பங்குபெற்று சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக அ.தி.மு.க.வின் விசுவாசம் மிக்க தொண்டனாக மக்கள் பணியாற்றி வருபவர் முதலமைச்சர் எடப்பாடியார். கட்சித்தலைமை இடுகின்ற கட்டளையைப் பணிந்து ஏற்று, கொடுக்கப்பட்ட பணிகளை முழு முயற்சியுடன் செய்து முடிப்பவர் எடப்பாடியார்.

தேர்தல் களத்தில் வெற்றியும் தோல்வியும் இயல்பானவை. மக்களாட்சியில் தேர்தல் களத்தை தீர்மானிப்பவை அந்தந்த தேர்தலின்போது மக்கள் தம் முன் வைத்திருக்கும் மையப் புள்ளிகளான அரசியல் பிரச்சினைகள்தான்.  மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியில் தான் ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிடுகிறாரா?  அல்லது போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றாரா? எனவே, அ.இ.அ.தி.மு.க முதலமைச்சரின் சொந்த தொகுதியில் தோல்வியுற்றதாக விமர்சிப்பது அவரது அரசியல் பக்குவமின்மையை காட்டுகிறது.  இப்பொழுது கூட முதலமைச்சரின் சொந்த கிராமமான, நெடுங்குளம் என்ற ஊராட்சியில் அனைத்து வார்டுகளிலும் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்கள். இதுதான் மக்களாட்சி தத்துவம்.

பொறாமை தீ

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்களால், மாநிலத்தின் முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பது தான் நடைமுறை.  அவ்வாறு தமிழ்நாட்டின் முதலமைச்சராக அனைத்திந்திய அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் எடப்பாடியார்.  பேரறிஞர் அண்ணா மறைவிற்குப் பிறகு, எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட செல்வாக்கு காரணமாகவும் அவர் அளித்த ஆதரவாலும் 1969 - ல் மு.கருணாநிதி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட  வரலாறு கூடவா மு.க.ஸ்டாலினுக்கு மறந்து போயிற்று? 2016 - ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியை முன்னிலைப்படுத்தியதால் கிடைத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையால்தான் இன்று மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறாரே தவிர,  தனது சொந்த சொல்வாக்கால் அவர் பெறவில்லை.  இந்த நாட்டின் சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகியவைகூட மறந்துபோன ஸ்டாலின் குறைந்தபட்சம் தன் குடும்பத்தின் நிகழ்வுகளை நினைவில் கொள்ள முடியாமல் போகிறது என்றால், அது பொறாமைத் தீ, அவர் அறிவை எந்த அளவிற்கு பொசுக்கி உள்ளது என்பதன் வெளிப்பாடுதான் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.

நாட்டில் அமைதியும், ஒற்றுமையும் நிலவ வேண்டும், மக்கள் அனைவரும் சகோதரத்துவ உணர்வுடன் அண்ணன்-தம்பிகளாக வாழ வேண்டும், சமூக நல்லிணக்கமும், மதச்சார்பின்மையும் போற்றப்பட வேண்டும் என்பதில், எங்கள் உயிரினும் மேலான இயக்கமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கிறது. இந்திய இறையாண்மை காப்பாற்றப்பட வேண்டும், நீதிமன்ற உத்தரவுகளுக்கு ஏற்ப நடைபெறும் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், அண்டை மாநிலங்களுடனும், மத்திய அரசுடனும் இயன்ற அளவு இணக்கமாய் இருந்து, தமிழ்நாட்டிற்குத் தேவையான திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில்தான் கழக அரசு செயல்படுகிறது.

10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொண்டிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பை 1872 - ம் ஆண்டிலிருந்து இந்திய நாடு பார்த்து வருகிறது.1948 - ம் ஆண்டே அதற்கென்று ஒரு தனிச்சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.  இதில் 1955 - ம் ஆண்டு சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.  பின்னர், தி.மு.க அங்கம் வகித்த பா.ஜ.க கூட்டணி அரசு 2003 - ம் ஆண்டு திருத்தச் சட்டம் கொண்டு வந்தது.  அந்த சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் 2010 - ம் ஆண்டு காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி அரசு செயல்படுத்தியது.  இப்பொழுதும் அப்படிப்பட்ட ஒரு “சென்சஸ்” மக்கள் தொகை கணக்கீடு நடத்தப்படுவதாக மத்திய அரசு, மத்திய உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியிருக்கிறது.  இப்பொழுது நடைபெற இருப்பது தேசிய குடியுரிமை பதிவேடு அல்ல, தேசிய மக்கள் தொகை பதிவேடுதான் என்று மத்திய அரசு விளக்கியிருக்கிறது.  மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேட எதையும் செய்ய தயாராக இருக்கும் மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு எதிராக மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்.

தார்மீக உரிமை கிடையாது

இலங்கை தமிழர்கள் வாழ்வில் எண்ணற்ற துயரங்களை ஏற்படுத்திய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், தி.மு.க.வுக்கும் இன்று இலங்கைத் தமிழர் நலன் குறித்துப் பேச எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது. 2009 - ம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருந்தபோது,  நாடாளுமன்றத் தேர்தலில் தாங்கள் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக, மத்தியில் நடைபெற்ற அரசுடன் சேர்ந்து கொண்டு, அண்ணா சமாதி வளாகத்தில் கருணாநிதி அரங்கேற்றிய ஒரு மணி நேர உண்ணாவிரத நாடகமும், அந்த நாடகத்தின் நிறைவில் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டதென அறிவித்த அப்பட்டமான பொய் அறிவிப்பும், அந்த அறிவிப்பை நம்பி இலங்கையில் தமிழர்கள் தங்கள் பதுங்கு குழிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கில் வெளியே வந்தபொழுது, அவர்கள் மீது இலங்கை ராணுவம் குண்டு மழை பொழிந்து அவர்களை கொன்று குவித்ததை மறக்க முடியுமா? அதற்காக தி.மு.க.போராட்டம் ஏதாவது நடத்தியதா ?

கனிமொழி பெற்ற பரிசு

இலங்கை தமிழர்கள் தங்களது சொந்த நாட்டில் ராஜ பக்சே அரசால் ஆடுகளைப் போல பட்டியில் அடைத்துவைக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் இலங்கைக்கு சென்ற தி.மு.க வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலுவும், கனிமொழியும் ராஜபக்சே அளித்த விருந்தை உண்டு மகிழ்ந்து பரிசுப் பொருட்களை பெற்றுவந்த காட்சி தமிழர்களின் மனங்களில் ஆறாத புண்ணாக இன்றும் இருக்கிறது. பல ஆண்டுகள் மத்திய ஆட்சி அதிகாரத்தில் தி.மு.க பங்கு வகித்திருந்த காலக்கட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை பெற்றுத்தரவில்லை.  இந்த நிகழ்வுகள் அனைத்தும் தமிழ் மக்களால் மன்னிக்க முடியாத குற்றங்கள் அல்லவா.    சிறுபான்மை சமூக மக்களின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டாமல் அந்த மக்களின் வாக்குகளைப் பெறவேண்டும் என்ற குறுகிய சிந்தனைக்குள் அடைபட்டுக்கிடக்கும் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டை போராட்ட களமாக்க முயற்சித்தால் அது அவருக்கு பெரும் தோல்வியாகவே முடியும்.

தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் இடம்பெற ஒருவர்  6 மாதம் வசித்தாலோ அல்லது அங்கே 6 மாதம் வசிப்பேன் என்று தெரிவித்தாலே போதும் என்று தேசிய மக்கள் தொகைப் பதிவேடு தெரிவிக்கிறது.  என்.ஆர்.சி நடைமுறைப்படுத்தப்படாது  எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருப்பதை மு.க.ஸ்டாலின் அறிவாரா? எது நடந்தாலும், அதில் அரசியல் ஆதாயம் தேட என்ன வழி என்ற சுய நல தீய சிந்தனையில் இருந்து விடுபட்டால் தான் பொதுவாழ்வில் இருப்பவர்கள் தலைவர்களாக முடியும்.தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சரை மு.க.ஸ்டாலின் உண்மைக்கு புறம்பான பிரச்சாரத்தைக் கொண்டு வீழ்த்த முயற்சித்தால் அது பயனளிக்காது.  தமிழ்நாடு முதலமைச்சர் தனது உழைப்பாலும், பணிவாலும், பண்பாலும் என்றைக்கும் ஓங்கிதான் நிற்பார்.  மக்கள் செல்வாக்கைப் பெறுவார். அரசின் அறிக்கைகளை படிப்பதில்லை, நடுநிலையான புள்ளிவிவரங்களை புரிந்து கொள்வதில்லை, கடந்த கால நிகழ்வுகளை நினைவில் கொள்வதில்லை.  வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று எதையும் ஒரு பொறுப்பற்ற பார்வையோடு அணுகும் மனநிலையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் இருப்பது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து