முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுட்டுக்கொல்லப்பட்ட எஸ்.ஐ குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி உதவி: முதல்வர் எடப்பாடி நேரில் வழங்கி ஆறுதல்

திங்கட்கிழமை, 13 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், 8.1.2020 அன்று இரவு இரண்டு நபர்களால் கைத்துப்பாக்கியால் சுடப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டும் உயிரிழந்த கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனின் குடும்பத்தினருக்கு சிறப்பினமாக தமிழ்நாடு அரசின் சார்பில் 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

தமிழ்நாடு - கேரள மாநில எல்லையான கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனை சாவடியில் 8.1.2020 அன்று இரவு 8 மணி முதல் பணியில் இருந்த களியக்காவிளை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் என்பவரை, இரவு சுமார் 9.30 மணியளவில் அங்கு வந்த இரண்டு நபர்கள், கைத்துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்திவிட்டும் தப்பிச் சென்றனர். இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்ட முதலமைச்சர், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கு ஏற்றாற்போல், கருணை அடிப்படையிலான அரசுப் பணி வழங்கப்படும் என்றும், சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனின் உயரிய தியாகத்தைக் கருத்தில் கொண்டு சிறப்பினமாக அவரது குடும்பத்திற்கு நிவாரண உதவியாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும் 10.1.2020 அன்று அறிவித்திருந்தார்.

அதன்படி, உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனின் குடும்பத்தினருக்கு சிறப்பினமாக தமிழ்நாடு அரசின் சார்பில் 1 கோடி ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் நேற்று வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் புதுடெல்லிக்கான தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதி என். தளவாய் சுந்தரம், தலைமைச் செயலாளர் க. சண்முகம், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் மு. வடநேரே மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நிதியை பெற்றுக் கொண்ட பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த வில்சனின் மனைவி ஏஞ்சல் மேரி கூறியதாவது:-

எனது கணவரை கொலை செய்த குற்றவாளிகளை கண்டுபிடித்து தகுந்த தண்டனை வாங்கி தருவதாக முதலமைச்சர் கூறியுள்ளார். எனக்கு நேர்ந்த கொடுமை யாருக்கும் நிகழக்கூடாது. ரூ.1 கோடி நிதி வழங்கிய முதல்வர் எனது மூத்த மகளுக்கு தகுந்த அரசு வேலை தருவதாக தெரிவித்துள்ளார் . இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து